Published : 01 Jun 2025 08:33 AM
Last Updated : 01 Jun 2025 08:33 AM
அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் தகுதி சுற்று 2-ல் இன்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வரும் 3-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்சிபியுடன் பட்டம் வெல்வதற்கு மோதும்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தகுதி சுற்று 1 ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் சரிவை சந்தித்து 101 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. முக்கியமான இநத் ஆட்டத்தில் முஷிர் கான் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
இதேபோன்று மார்கோ யான்சன் இல்லாததும், யுவேந்திர சாஹலின் காயம் பந்துவீச்சு துறையின் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கால்பதிக்க வேண்டும் என்றால் அனைத்து துறைகளிலும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.
5 முறை சாம்பியனான மும்பை எப்போதுமே பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிட்டால் சிறப்பாக செயல்படுவது வழக்கம். எலிமினேட்டர் ஆட்டத்தில் அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 228 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தது. 2 முறை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்த ரோஹித் சர்மா தொடக்கத்தில் நிதானமாக செயல்பட்டு அதன் பின்னர் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது அணிக்கு பலம் சேர்த்தது.
50 பந்துகளில் 81 ரன்கள் விளாசிய அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோன்ற ஜானி பேர்ஸ்டோ பங்கேற்ற முதல் ஆட்டத்திலேயே 22 பந்துகளில் 47 ரன்கள் விளாசி அபாரமான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். சூயர்குமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கினர். மேலும் கடைசி 4 ஓவர்களில் குஜராத் அணியின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தியிருந்தனர்.
ரிச்சர்ட் க்ளீசன் 16-வது ஓவரில் அபாரமான பார்மில் இருந்த சாய்சுதர்சனை ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். இதேபோன்று 18-வது ஓவரை வீசிய ஜஸ்பிரீத் பும்ரா 9 ரன்களை மட்டுமே வழங்கி குஜராத் அணியின் ரன்ரேட் தேவையை அதிகரித்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் பந்துவீச்சு துறை, பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ரன்குவிப்பின் சொர்க்கபுரி: நடப்பு ஐபிஎல் தொடரில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 7 லீக் ஆட்டங்களில் 6-ல் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு ஆட்டத்தில் (குஜராத் - மும்பை) மட்டும் 196 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தது.
முதலில் பேட் செய்த அணிகள் பெரிய அளவில் ரன்வேட்டை நிகழ்த்தி உள்ளளன. அதிகபட்சமாக பஞ்சாப் அணி, குஜராத்துக்கு எதிராக 243 ரன்கள் குவித்திருந்தது. அதேவேளையில் குஜராத் அணி டெல்லி அணிக்கு எதிராக 203 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தியிருந்தது.
மும்பை அணி இங்கு மார்ச் 29-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மோதியிருந்தது. இந்த ஆட்டத்தில் 197 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
2-வது முறையாக.. நடப்பு சீசனில் மும்பை - பஞ்சாப் அணிகள் லீக் ஆட்டத்தில் மே 26-ம் தேதி ஜெய்ப்பூரில் மோதியிருந்தன. இந்த ஆட்டத்தில் 185 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி வெற்றிகரமாக துரத்தியிருந்தது. தற்போது இரு அணிகளும் 2-வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன.
நேருக்கு நேர்: ஆட்டங்கள் 33 - மும்பை வெற்றி 17 Vs பஞ்சாப் வெற்றி 16
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT