Published : 31 May 2025 10:00 PM
Last Updated : 31 May 2025 10:00 PM
மும்பை: மும்பையின் மாற்றுத் திறனாளி அணி வீரர்களுடன் இணைந்து வீல்-சேரில் அமர்ந்தபடி கிரிக்கெட் விளையாடி தானும் மகிழ்ந்து, அந்த வீரர்களையும் மகிழ செய்தார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.
கடந்த 2022-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்தார். மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அவர் அறியப்படுகிறார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மொத்தம் 420 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 20,014 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகள் அடங்கும். 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்த சூழலில் தற்போது இந்தியா வந்துள்ள அவர் ‘மகிழ்வித்து மகிழ்’ என்பதற்கு ஏற்ப ஒரு செயலை செய்துள்ளார். மும்பையில் உள்ள மாற்றுத் திறனாளி வீல்-சேர் கிரிக்கெட் அணி உடன் சேர்ந்து அவர் கிரிக்கெட் விளையாடினார். வீல்-சேரில் அமர்ந்தபடி பேட் செய்த அவர், தனது அன்-ஆர்த்தோடெக்ஸ் ஷாட்களை ஆடி அசத்தினார். அதோடு வீல்-சேரில் அமர்ந்து கொண்டே சிங்கிள்களும் எடுத்தார். அவரது ஆட்டத்தை கண்டு அங்கு இருந்த வீரர்கள் மற்றும் ஆரவாரம் செய்தனர்.
“நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சி தருகிறது. இந்த ஆட்டத்தை மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளேன். இந்த ஆண்டு ஆர்சிபி அணியின் ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன்” என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT