Published : 31 May 2025 11:29 AM
Last Updated : 31 May 2025 11:29 AM
புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப், கட்டாய மரபணு ரீதியான பாலின பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். உலக குத்துச்சண்டை அமைப்பின் புதிய நிர்வாகக் குழுவின் கொள்கை முடிவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
சுவிட்சர்லாந்து நாட்டின் லோசான் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக குத்துச்சண்டை அமைப்பு வெள்ளிக்கிழமை அன்று இதை அறிவித்தது. இதன்படி அனைத்து குத்துச்சண்டை வீரர்களுக்கும் இந்த மரபணு ரீதியான பாலின பரிசோதனை கட்டாயம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக இதில் அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் குறித்து புதிய நிர்வாகக் குழு பேசியது கவனிக்கத்தக்கது. அடுத்த மாதம் நெதர்லாந்தில் நடைபெற உள்ள குத்துச்சண்டை போட்டியில் அவர் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்பாக இந்த சோதனையை அவர் மேற்கொள்ள வேண்டும் என உலக குத்துச்சண்டை அமைப்பு கூறியுள்ளது. அதன்பின் தான் அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என தகவல்.
“போட்டிகளில் பங்கேற்கும் குத்துச்சண்டை அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மரபணு ரீதியான பாலின பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் வீரர்களின் பாலினம், வயது, உடல் எடை போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும். இந்த சோதனையை தேசிய அளவிலான குத்துச்சண்டை அமைப்புகள் மேற்கொண்டு, அதன் அறிக்கையை எங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்” என உலக குத்துச்சண்டை அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் சர்வதேச குத்துச்சண்டை அமைப்புக்கு (IBA) மாற்றாக உலக குத்துச்சண்டை அமைப்பின் பரிந்துரை ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், போட்டியாளர்களின் பாலினம் சார்ந்த சோதனையை மேற்கொள்வதில் சில அழுத்தங்களை உலக குத்துச்சண்டை அமைப்பு எதிர்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
யார் இந்த இமானே கெலிஃப்? - கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் மகளிருக்கான 66 கிலோ எடைப்பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி மற்றும் அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் விளையாடிய ஆட்டத்தில், 46 நொடிகளில் ஏஞ்சலா வாக் அவுட் கொடுத்தார். இமானே கெலிஃப் பெண் அல்ல ஆண் என நடுவர்களிடம் ஏஞ்சலா தெரிவித்தார். இது சர்ச்சையானது. இருப்பினும் தான் பெண்ணாகப் பிறந்து, பெண்ணாகவே வாழ்கிறேன் என இமானே கெலிஃப் தெரிவித்தார்.
சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இமானே கெலிஃப்பை சோதனை அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தது. இருப்பினும் பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்காத காரணத்தால் இமானே கெலிஃப் போட்டியில் பங்கேற்று, தங்கமும் வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT