Published : 30 May 2025 11:48 AM
Last Updated : 30 May 2025 11:48 AM
முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. ஆனால், கடைசி 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் லீக் சுற்றை முதல் 2 இடங்களுடன் நிறைவு செய்ய முடியாமல் போனது. லீக் சுற்றை 3-வது இடத்தில் முடித்ததால் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுகிறது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருந்தது. லீக் சுற்றில் முதல் 2 இடங்களில் நிறைவு செய்வதற்கு மும்பை அணிக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனால், தனது கடைசி லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வி அடைந்ததால் 4-வது இடத்திலேயே மும்பை தங்கியது.
இன்றைய ஆட்டம் நாக் அவுட் போட்டியாகும். இதில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். மாறாக வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்துக்கு முன்னேறும். இந்த ஆட்டம் வரும் 1-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 11-வது முறையாக பிளே ஆஃப் சுற்றை சந்திக்கிறது. அதேவேளையில் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 4-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் விளையாட உள்ளது.
கேப்டனாக ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் தனது தலைமைப் பண்பு மீதான நம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியபோது ஏளனம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, ரசிகர்களின் அன்பை மீண்டும் பெற்றுள்ளார். கோப்பையை வெல்வதற்கு அவர், உதவும் பட்சத்தில் அணியின் புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தனது இடத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
எனினும் இருவருமே அணியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகளை கண்டறியவேண்டும். குஜராத் அணி லீக் சுற்றின் கடைசி பகுதியில் உத்வேகத்தை இழந்தது. அந்த அணி கடைசி 2 ஆட்டங்களில் மட்டும் கூட்டாக 465 ரன்களை தாரை வார்த்தது. இதனால் பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
பவர்பிளேவில் முகமது சிராஜ் விக்கெட்களை வீழ்த்துவதில் தேக்கம் அடைந்துள்ளார். மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷத் கானும் தடுமாறி வருகிறார். இது நடப்பு சீசனில் 23 விக்கெட்களை வீழ்த்தி அணியின் துருப்பு சீட்டாக உள்ள பிரசித் கிருஷ்ணாவுக்கு நெருக்கடியை கொடுப்பதாக மாறியுள்ளது. கூடுதலாக சுழற்பந்து வீச்சில் ரஷித் கான் நடப்பு சீசனில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
14 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், ஓவருக்கு சராசரியாக 9.47 ரன்களை வாரி வழங்கியுள்ளார். பேட்டிங்கை பொறுத்தவரையில் சாய் சுதர்சன் (679 ரன்கள்), ஷுப்மன் கில் (649), ஜாஸ் பட்லர் (538) ஆகியோர் பெரிய அளவில் பங்களிப்பை வழங்கி உள்ளனர். இதில் இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் கலந்து கொள்வதற்காக தாயகம் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதனால் அவர், ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ், எந்த அளவுக்கு பலம் சேர்ப்பார் என்பது தெரியவில்லை. மேலும் ஷாருக் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஆர்டர் மிகவும் நம்பகமானதாக இல்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணியைப் போலவே, மும்பை இந்தியன்ஸ் அணியும் வெளிநாட்டு வீரர்களின் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பரும் தொடக்க பேட்ஸ்மேனுமான தென் ஆப்பிரிக்காவின் ரியான் ரிக்கெல்டன், ஆல்ரவுண்டர் கார்பின் போஷ் ஆகியோர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராவதற்காக தாயகம் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதேபோன்று இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக தாயகம் வென்றுவிட்டார்.
இவர்களுக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்டு கிளெஸ்ஸன், அசலங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ, ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். நடுவரிசையில் திலக் வர்மா பார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். நமன் திர் தாக்குதல் ஆட்டம் தொடுத்தாலும் அவரிடம் இருந்து சீரான ஆட்டம் வெளிப்படுவது இல்லை.
சூர்யகுமார் யாதவ் மட்டுமே அணியின் பேட்டிங்கை தூக்கி நிறுத்துபவராக இருந்து வருகிறார். நடப்பு சீசனில் அவர், 640 ரன்கள் வேட்டையாடி உள்ளார். சூர்யகுமார் யாதவ் விரைவாக ஆட்டமிழந்தால் மும்பை அணி பெரிய அளவில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். முதலில் பேட்டிங் செய்யும்போது, தொடக்க ஓவர்களில் மும்பை பேட்ஸ்மேன்களின் ரன் குவிக்கும் வேகமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதிலும் அந்த அணி கவனம் செலுத்தக்கூடும்.
இதில் வெற்றி பெறுகின்ற அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உடன் விளையாடும். அதில் வெற்றி பெறுகின்ற அணி ஆர்சிபி அணியுடன் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT