Published : 29 May 2025 04:50 PM
Last Updated : 29 May 2025 04:50 PM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்யாமல் விட்டது பலருக்கும் ஆச்சரியமளிப்பதே. ஏனெனில் கேப்டன்கள், சீனியர்கள் இல்லாத அணியில் கேப்டனாகவே கூட ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அணியிலேயே இல்லை என்பது பெரிய ஆச்சரியம் என்பதோடு கவுதம் கம்பீர் மீது பலத்த ஐயங்களை எழுப்பக் கூடியதே.
கம்பீர் போன்ற அதாரிட்டேரியன் அணித் தேர்வுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறினால் அது நிச்சயம் நம்பத்தகுந்ததல்ல. ஸ்ரேயஸ் அய்யரை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்டதற்கு ‘நான் செலக்டர் அல்ல’ என்று ஒற்றை வரியில் அதைப் புறக்கணிக்கிறார் கம்பீர் என்றால் நிச்சயம் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஸ்ரேயஸ் அய்யர் தேர்வில் இவரது கையும் இருக்கிறது என்பதே நம் வாசிப்பு.
ஸ்ரேயஸ் அய்யர் உள்நாட்டுக் கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் அவரது கைவண்ணத்தில் பட்டைத்தீட்டப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய ஃபோர்ஸ் ஆக வந்து நின்றுள்ளது.
கடந்த பிப்ரவரி 2024-ல் அய்யர் கடைசியாக டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதன் பிறகே சாம்பியன்ஸ் டிராபியிலும் ஸ்ரேயஸ் அய்யர் அபாரமாக ஆடி 5 போட்டிகளில் 243 ரன்களை எடுத்தார். ரஞ்சி சீசனில் 7 இன்னிங்ஸ்களில் 480 ரன்களை எடுத்தார்.
தற்போது ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 514 ரன்களை 171.90 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். சராசரி 51.40. சாம்பியன்ஸ் டிராபி அணியிலேயே கம்பீர், அய்யரைத் தேர்வு செய்தது குறித்து அதிருப்தி வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின, இப்போது இது. ஸ்ரேயஸ் அய்யர் மீது கம்பீருக்கு என்ன காண்டு என்று தெரியவில்லை.
சாய் சுதர்ஷனுக்கு இடம் இருக்கிறது ஆனால் பிரமாதமாக ஆடி வரும் கேப்டன்சி வீரர் ஸ்ரேயஸ் அய்யருக்கு இடமில்லை என்று அகார்க்கரும் தெரிவித்திருப்பது, வேறு ஏதோ நடக்கிறது என்ற ஐயத்தைத்தான் எழுப்புகிறது, கம்பீர் சொல்வது போல் ஆட்டத்திறன், ஃபார்ம் போன்றவை தேர்வில் தவிர்க்கப்படுகிறது போலும். அதை விடுத்து சொந்த எண்ணங்களும் பேவரிட்டிசமும் அணித்தேர்வில் இடம்பிடித்துள்ளது போலும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT