Published : 29 May 2025 04:41 PM
Last Updated : 29 May 2025 04:41 PM
ஐபிஎல் நிர்வாகத்தின் நடத்தை விதிகளை மீறுவதற்கான தண்டனைகளைப் பொறுத்தவரை, பிசிசிஐ வெவ்வேறு வீரர்களை வித்தியாசமாக நடத்துவதாகவும் ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்புமாக நடந்து கொள்கிறது என்றும் முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் லெக் ஸ்பின்னர் திக்வேஷ் சிங் ராத்தி, சன் ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மாவுடன் மோதியதால் ஒரு போட்டிக்குத் தடை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மாவுக்கு அபராதமும் தகுதியிழப்புப் புள்ளிகளும் விதிக்கப்பட்டன.
முன்பு விராட் கோலி, கம்பீர் ஆகியோர் அசிங்கமாக மைதானத்திலேயே அடித்துக் கொள்ளாத குறையாக மோதிக்கொண்டனர். தோனி ஒருமுறை நடுவர் தீர்ப்பை எதிர்த்து டக் அவுட்டிலிருந்து மைதானத்திற்குள்ளேயே அதிரடியாக நுழைந்து தகராறு செய்தார். விராட் கோலி நடுவர்களுடன் வாதாடாத நாளே இல்லை என்று கூறலாம். ஆனால் இவர்களுக்கெல்லாம் தண்டனை இல்லை. திக்வேஷ் ராத்திக்கு தண்டனையா என்று விரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“திக்வேஷ் ராத்தி தடை உத்தரவு கொஞ்சம் அதிகமாகவே எனக்குப் படுகிறது. அவர் இப்போதுதான் ஐபிஎல் தொடரில் ஆடுகிறார். தோனி விதியை மீறி மைதானத்திற்குள் புகுந்து நடுவருடன் சண்டையிட்டார் அவர் தடை செய்யப்படவில்லை. ஏன்? விராட் கோலி எண்ணற்ற முறை நடுவர்களை முறைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், இவருக்கு ஏன் தண்டனை இல்லை? ராத்திக்கு மட்டும் தண்டனையா? அவர் இளம் வீரர், மன்னிப்பதுதான் சிறந்தது.” என்கிறார் விரேந்திர சேவாக்.
ஆனால், ராத்தி விஷயம் மிகவும் சிக்கலானது. ஏனெனில் திக்வேஷ் ராத்தியை இந்த ஒரு சம்பவத்தை வைத்து தடை செய்யவில்லை. எதிரணி வீரர்களை அவுட் ஆக்கிய பிறகு நோட்-புக்கை எடுத்து டிக் செய்யும் கொண்டாட்டத்திற்காக 3 தகுதியிழப்புப் புள்ளிகளை ஏற்கெனவே அவர் பெற்றிருந்தார். இதே நோட்-புக் கொண்டாட்டம்தான் அபிஷேக் சர்மாவுக்கும் ராத்திக்கும் இடையே மோதலை உருவாக்கியது. இதனால் அவரது தகுதியிழப்புப் புள்ளிகள் 5 ஆக உயர்ந்ததால் தடை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT