Published : 29 May 2025 03:15 PM
Last Updated : 29 May 2025 03:15 PM
ஜூன் 20ம் தேதி தொடங்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணித் தேர்வு குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் பெர்பாமன்ஸ் வைத்து டெஸ்ட் அணி தேர்வு நடைபெறாது என்று கூறிக்கொண்டே சாய் சுதர்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்பு ஹர்ஷித் ராணா தேவைப்பட்டார் திடீரென அவரை உட்கார வைத்து அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவில் ஆகாஷ் தீப் வேண்டாதவராகி விட்டார், ராணா தேவைப்பட்டார். இப்படிப்பட்ட அணித்தேர்வெல்லாம் அவரவர் ஆட்டத்திறன், சமீபத்திய ஃபார்ம் அடிப்படையில் நிகழ்த்தப்படாமல் அகார்கர், கம்பீர் ஆகியோரின் சொந்த உள்ளுணர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக 69 மற்றும் 56 ரன்களை எடுத்தும், நியூஸிலாந்துக்கு எதிராக அபாரமான 150 ரன்களை விளாசியும் ஆஸ்திரேலியாவில் எங்கிருந்தோ தேவ்தத் படிக்கல் கொண்டு வரப்படுகிறார், ஆனால் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பில்லை. இப்போது இங்கிலாந்து தொடரிலேயே இல்லை. என்ன நடக்கிறது என்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.
ரவிசாஸ்திரி-கோலி மற்றும் ராகுல் திராவிட்-ரோஹித் சர்மா காலத்தில் அணித்தேர்வு ஆட்டத்திறன், பார்ம் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். ஆனால் இப்போது இவர்களின் கற்பனையான ஒரு முடிவின் மூலம் யூகத்தின் மூலமும் அணித்தேர்வு நடைபெறுகிறது, இத்தகைய மனப்பான்மையின் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் சர்பராஸ் கான் என்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.
“கம்பீர் பயிற்சித் தலைமையின் கீழ் அணி நிர்வாகத்தின் முடிவுகள் ஆட்டத்திறன் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முன் தவிர்ப்பதாகவே அமைகிறது. அணித்தேர்வுக்குழுவும், கம்பீரும் தங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர்.. இது தவறு.
உதாரணமாக, சர்பராஸ் கான் இவர் நன்றாக ஆடியும் 2 போட்டிகளில் சரியாக ஆடாததால் ஆஸ்திரேலியாவில் அவரால் ஆட முடியாது என்று கம்பீர் முடிவு கட்டிவிட்டார் போலும். கருண் நாயரைக் காட்டிலும் நன்றாக ஆடியும் சர்பராஸ் கான் இங்கிலாந்து தொடரில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். எனவே சர்பராஸ் கான் தேர்வின்மை அவர் ஆட்டத்திறன் பற்றியது அல்ல. மாறாக இங்கிலாந்தில், ஆஸ்திரேலியாவில் சர்பராஸ் கான் ரன் எடுக்க மாட்டார் என்பது இவர்களது எண்ணம், மனப்பதிவு, பிம்பம். இதற்கு எந்த ஒரு புறவய ஆதாரமும் இல்லை. கருண் நாயர் இங்கிலாந்தில் ரன்கள் எடுப்பார் என்ற இவர்களது எண்ணத்திற்கும் ஆதாரம் இல்லை. வெறும் இவர்களது எண்ணம் மட்டுமே.
ஆட்டத்திறன் அடிப்படையில் இல்லாமல் வெறும் உள்ளுணர்வின் மூலம் ஒருவரிடம் திறமையை அடையாளம் கண்டு அவரை ஆதரிப்பது என்பது இம்ரான் கான், சவுரவ் கங்குலி போன்றவர்களுக்குத்தான் வரும். இது ஒரு அரிய வரப்பிரசாதம். இந்தத் திறமை கம்பீருக்கு இருக்கிறதா? அகார்க்கருக்கு இருக்கிறதா?
இப்படி இவர்கள் இஷ்டத்திற்கு அணித்தேர்வு செய்வது அபாயகரமானது, இதனால் நாம் நல்ல வீரர்களை இழக்க நேரிடும். இவர்களால் பாதிக்கப்பட்ட வீரர்களினால் உள்ளேயிருக்கும் வீரர்களும் பாதுகாப்பின்மையை உணர்வார்கள், அதிருப்தியுறுவார்கள். இது ஆபத்தானது” என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT