Last Updated : 28 May, 2025 10:53 PM

 

Published : 28 May 2025 10:53 PM
Last Updated : 28 May 2025 10:53 PM

ஜிதேஷை ரன் அவுட் செய்த திக்வேஷ்: அப்பீலை திரும்பப் பெற்ற ரிஷப் பந்த் - அஸ்வின் அதிருப்தி

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் 228 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து அசத்தியது ஆர்சிபி. இதன் மூலம் அந்த அணி குவாலிபையர்-1 போட்டியில் விளையாடுகிறது.

லக்னோவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஆர்சிபி பேட் செய்த போது நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ஜிதேஷ் சர்மாவை ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்து அப்பீல் செய்தார் லக்னோவின் திக்வேஷ் ராத்தி. இருப்பினும் அதை லக்னோ கேப்டன் திரும்பப் பெற்றார். அது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை அதிருப்தி அடைய செய்துள்ளது.

ஆர்சிபி பேட் செய்த போது 17-வது ஓவரை திக்வேஷ் வீசி இருந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஜிதேஷ் சர்மா பந்து வீச்சாளர் திக்வேஷ் பந்து வீசுவதற்கு முன்பாகவே கிரீஸ் லைனை தாண்டி சென்றார். அதை கவனித்து, ஸ்டம்புகளை தகர்த்தார் திக்வேஷ். அதோடு ரன் அவுட்டுக்கான அப்பீலையும் செய்தார். மூன்றாவது நடுவர் அதை பரிசீலித்த நிலையில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த், அப்பீலை திரும்பப் பெற்றார். அதன் பின்னர் ரிஷப் பந்த்தை கட்டி அணைத்தார் ஜிதேஷ் சர்மா. திக்வேஷ் டெலிவரி வீசுவதற்கான ஸ்ட்ரைடை பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை ஜிதேஷ் கிரீஸுக்குள் இருந்தார். அதை மூன்றாவது நடுவர் உறுதி செய்தார். அதனால் அது நாட்-அவுட் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து அஸ்வின் அதிருப்தி அடைந்துள்ளார். “ஜிதேஷை நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் திக்வேஷ் அவுட் செய்தார். ‘அப்பீல் செய்கிறீர்களா?’ என நடுவர் கேட்க, திக்வேஷ் அப்பீலுக்கு சென்றார். அதை மூன்றாவது நடுவர் பரிசீலித்தார். அதற்குள் அப்பீலை ரிஷப் பந்த் திரும்பப் பெற்றார். நாட்-அவுட் கொடுக்கப்பட்டது.

இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், இதன் பின்னர் வர்ணனையாளர்கள் சிலவற்றை சொல்லி இருந்தார்கள். பந்த்தின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் குறித்து பேசினர். தன் அணியில் உள்ள பவுலரை ஆதரிப்பது ஒரு கேப்டனின் பணி. ஆனால், பந்த் அதை செய்ய தவறினார். கோடிக்கணக்கான மக்களின் முன் தன் அணியின் பவுலரை சிறுமைப்படுத்தினார். இதன் பின்னர் அது மாதிரியான அப்பீலை அவர் செய்வாரா என தெரியவில்லை.

‘திக்வேஷ் அப்படி செய்திருக்க கூடாது’ என நிறைய பேர் கமெண்ட் செய்தனர். ஏன் அப்படி செய்யக்கூடாது? அதில் என்ன தவறு இருக்கிறது? திக்வேஷ் எனது உறவினரோ, நண்பரோ அல்ல. அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், நீங்கள் அந்த பவுலரை அச்சுறுத்துகிறீர்கள். ஏனெனில், பவுலர் குறித்து யாரும் அக்கறை கொள்வது இல்லை. அதனால் தான் கோடிக்கணக்கான பேர் பார்க்க அவர் அவமதிக்கப்பட்டாரா?” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மன்கட் அவுட்? - இந்த மன்கட் அவுட் முறை உருவான கதை சுவாரஸ்யமானது. 1947-ல் சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய பவுலர் வினு மன்கட், ஆஸ்திரேலிய வீரர் பில் பிரவுனை இதே பாணியில் ரன் அவுட் செய்தார். அதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இதே பில் பிரவுனை, மன்கட் இப்படி ரன் அவுட் செய்தார். இதையடுத்து விளையாட்டின் மாண்பை மன்கட் நாசம் செய்துவிட்டார் என்று அப்போது ஊடகங்கள் அவருக்கு எதிராக விமர்சனம் செய்தன.

ஆனால், இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன், வினு மன்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். பிறகு இந்த ரன் அவுட் முறை, வினு மன்கட் பெயரிலேயே, மன்கட் அவுட் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த முறை அவுட் அதிகாரபூர்வ ரன் அவுட் ஆக கருதப்படும் என எம்சிசி கடந்த 2022-ல் உறுதிப்படுத்தியது. நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன் பவுலர்கள் பந்து வீசும்போது கிரீஸை விட்டு வெளியே செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் 'மன்கட் அவுட்' செய்யலாம். இந்த விதி ஏற்கெனவே கிரிக்கெட்டில் இருந்தாலும், இது சரியான நடைமுறையாக இருக்காது என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலர் இந்த முறையில் அவுட் செய்யாமல் இருந்தனர். ஆனாலும் இதனை அதிகாரபூர்வ ரன் அவுட் ஆக அங்கீகரித்துள்ளது எம்சிசி.

அஸ்வினும் மன்கடும்: கடந்த 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அஸ்வின் விளையாடிய போது இதே முறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்திருந்தார். அது கிரிக்கெட் உலகில் விவாதமானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x