Published : 27 May 2025 07:15 AM
Last Updated : 27 May 2025 07:15 AM

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று மோதல்: முதல் 2 இடங்களை பிடிக்க ஆர்சிபி-க்கு கடைசி வாய்ப்பு

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. இந்த 4 அணிகள் இடையே லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வது யார்? என்பதில் போட்டி நிலவி வருகிறது.

ஏனெனில் முதல் இரு இடங்களுக்குள் லீக் சுற்றை நிறைவு செய்யும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். லீக் சுற்றி முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் நுழையும். மாறாக தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறும்.

இதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் நுழைய முடியும். இதன் காரணமாகவே லீக் சுற்றை முதல் 2 இடங்களுக்குள் நிறைவு செய்வதில் இந்த 4 அணிகளும் மல்லுக்கட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் குஜராத் அணி தனது அனைத்து லீக் ஆட்டங்களையும் விளையாடி முடித்துவிட்டது. அந்த அணி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று 0.254 நிகர ரன் விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

குஜராத் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்திருந்தது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மற்ற 3 அணிகளுக்கும் லீக் சுற்றை முதல் 2 இடங்களுக்குள் நிறைவு செய்வதற்கான பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தினால் 19 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். இது அந்த அணி லீக் சுற்றை முதல் 2 இடங்களுடன் முடிப்பதை உறுதி செய்யும். மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் அந்த அணி 18 புள்ளிகளுடன் லீக் சுற்றை முதல் 2 இடங்களுடன் நிறைவு செய்யும். ஏனெனில் குஜராத் அணியின் நிகர ரன் விகிதத்தைவிட மும்பை அணியின் நிகர ரன் விகிதம் அதிகமாக உள்ளது.

17 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள ஆர்சிபி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 19 புள்ளிகளுடன் லீக் சுற்றை முதல் 2 இடங்களுக்குள் நிறைவு செய்யும். இது ஆர்சிபி அணிக்கு கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அந்த அணி கடைசியாக 2016-ம் ஆண்டு லீக் சுற்றை முதல் 2 இடங்களுக்குள் நிறைவு செய்திருந்தது.

ஆர்சிபி தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ மைதானத்தில் ஹைதராபாத் அணியிடம் 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணியுடன் இணைந்திருப்பது பந்து துறைக்கு பலம் சேர்க்கக்கூடும். நடப்பு சீசனில் அவர், 10 ஆட்டங்களில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் 64 பந்துகளில் 117 ரன்கள் விளாசிய மிட்செல் மார்ஷ், 27 பந்துகளில், 56 ரன்கள் விளாசிய நிகோலஸ் பூரன் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். எய்டன் மார்க்ம், ஆயுஷ் பதோனி ஆகியோரும் அதிரடியில் பலம் சேர்க்கக்கூடும்.

பந்துவீச்சில் கடந்த ஆட்த்தில் வில்லியம் ஓ'ரூர்க் 3 விக்கெட்கள் வீழ்த்தி பலம் சேர்த்தார். ஆர்சிபி பேட்டிங் வரிசைக்கு அவர், அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். ஓர் ஆட்டத்தில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதி தடை முடிந்து இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும். ஒட்டுமொத்தத்தில் தனது லீக் ஆட்டத்தை லக்னோ அணி வெற்றியுடன் நிறைவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x