Last Updated : 26 May, 2025 10:28 AM

1  

Published : 26 May 2025 10:28 AM
Last Updated : 26 May 2025 10:28 AM

‘முதலில் பைக் ஓட்டி மகிழ்வேன்; பின்னர்தான்...’ - ஓய்வு குறித்து தோனி ஓபன் டாக்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியோடு நிறைவு செய்துள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எப்போதும் போல தனது ஓய்வு குறித்த முடிவை சஸ்பென்ஸாகவே இந்த சீசனிலும் அப்படியே உயிர்ப்போடு தோனி வைத்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் உடனான கடைசி லீக் ஆட்டத்தில் 83 ரன்களில் வென்றது சிஎஸ்கே. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என இந்த ஆட்டத்தில் அனைத்துமே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கைகூடியது. இந்த சீசனில் கிடைத்துள்ள பாசிட்டிவ்களை அடுத்த சீசனில் சிஎஸ்கே நிச்சயம் கொண்டு வேண்டும். ஏனெனில், முதல் சீசனோடு சிஎஸ்கே வெளியேறிய போது ‘எஞ்சிய ஆட்டங்களை அடுத்த போட்டிக்கான பயிற்சியாக எடுத்துக் கொள்வோம்’ என சிஎஸ்கே நிர்வாகம் ஒருமித்த குரலில் தெரிவித்தது.

இந்நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்தது, “ஒவ்வொரு சீசனிலும் புதிய சவால். கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் போது உடலை கூடுதல் கவனம் கொண்டு பராமரிக்க வேண்டும். சிஎஸ்கே அணி நிர்வாகம் எனக்கு உதவியாக உள்ளது. எனது உடலும் ஒத்துழைக்கிறது. தேசத்துக்காக சர்வதேச அளவில் விளையாடிய போது உடல் அளவில் தொந்தரவு எதுவும் இல்லை.

எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4 அல்லது 5 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள 15 சதவீதம் கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டி உள்ளது. இது தொழில்முறை கிரிக்கெட். அதனால் இதில் பெஸ்ட் லெவல் என்பது முக்கியம். எனது உடலைத் தகுதியுடன் வைத்திருக்க விரும்புகிறேன்.

கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெற வேண்டும் என்றால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும். உங்களால் அணிக்கு எந்த அளவுக்கு பங்களிப்பு வழங்க முடிகிறது என்பது முக்கியம். அதேபோல அணிக்கு நீங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியும் உள்ளது.

நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, மோட்டார் சைக்கிள் ஓட்டி மகிழ்வேன். அதன் பின்னர் ஓய்வு குறித்து முடிவு செய்வேன். நான் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் மீண்டும் விளையாட வருகிறேன் என்றும் செல்லவில்லை. அது குறித்து முடிவு எனக்கு நேரம் இருக்கிறது” என்றார்.

நடப்பு சீசனில் 13 இன்னிங்ஸ் விளையாடியுள்ள தோனி, மொத்தமாக 196 ரன்கள் எடுத்துள்ளார். தலா 12 ஃபோர் மற்றும் சிக்ஸர் விளாசி உள்ளார். விக்கெட் கீப்பராக 6 கேட்ச் மற்றும் 5 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

தற்போது 43 வயதான தோனி, கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார். அடுத்த சீசனில் அவர் 44 வயதை எட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் சென்னை மண்ணில் தான் தனது கடைசி கிரிக்கெட் ஆட்டம் இருக்கும் தோனி ஏற்கெனவே உறுதிபட தெரிவித்துள்ளார். அதை வைத்து பார்க்கும்போது அடுத்த சீசனிலும் தோனி விளையாட வாய்ப்பு உள்ளது என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x