Published : 26 May 2025 07:00 AM
Last Updated : 26 May 2025 07:00 AM
ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கெனவே, பஞ்சாப், மும்பை இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், முதல் 2 இடங்களுக்குள் முன்னேறும் முனைப்பில் பஞ்சாப் அணி உள்ளது.
பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 17 புள்ளிகளுடன் உள்ளது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களுக்குள் வர வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் மும்பை அணி, 13 ஆட்டங்களில் பங்கேற்று 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னேறுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அதேநேரத்தில் பெங்களூரு, லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே மும்பை அணியின் இடம் தெரியவரும்.
மும்பை அணி பேட்டிங்கில் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா, வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர் என வலுவடன் காணப்படுகிறது. அதேபோல் பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா, தீபக் சாஹர், வில் ஜேக்ஸ், மிட்செல் சான்ட்னர், கரண் சர்மா ஆகியோர் பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தர காத்திருக்கின்றனர்.
அதேபோல் பஞ்சாப் அணியும் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயஸ் ஐயர், நேஹல் வதேரா, சஷாங் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோருடன் எதிரணியை மிரட்டுவதற்குத் தயாராக உள்ளது.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ யான்சன், ஹர்பிரீத் பிரார் ஆகியோரும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT