Last Updated : 25 May, 2025 11:52 AM

 

Published : 25 May 2025 11:52 AM
Last Updated : 25 May 2025 11:52 AM

‘நடுவரின் தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ - சிக்ஸ் மறுக்கப்பட்டது குறித்து ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி பேட் செய்தபோது டிவி நடுவர் சிக்ஸர் கொடுக்க மறுத்தது குறித்து தனது கருத்தை பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ள அவர், “ஐபிஎல் மாதிரியான கிரிக்கெட் தொடரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் நடுவர்களின் வசம் இருந்தும், இது மாதிரியான தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது நடக்கக் கூடாது. ஆட்டத்துக்கு பிறகு கருண் நாயரிடம் பேசினேன். அது சிக்ஸர் தான் என அவர் உறுதியாக தெரிவித்தார்” என தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது? - ஜெய்ப்பூரில் நேற்று (மே 24) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸின் 15-வது ஓவரின் கடைசி பந்தை லாங்-ஆன் திசையில் சிக்ஸர் அடிக்கும் வகையில் விளாசி இருந்தார் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங். அந்த பந்தை பவுண்டரி லைன் அருகே இருந்த கருண் நாயர் தடுக்க முயன்றார். இருப்பினும் பேலன்ஸ் செய்ய முடியாத காரணத்தால் பந்தை உள்பக்கமாக தட்டிவிட்டார். அதோடு அது சிக்ஸ் என அவரே தெரிவித்தார். அவரது கால் பவுண்டரி லைனை தொட்டு இருக்கலாம் என எண்ணி அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நிலையில் டிவி நடுவர் அதை பரிசீலித்த போது கருண் நாயரின் கையில் பந்து இருந்த போது, அவரது கால்கள் பவுண்டரி லைனை தொட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என கருதி சிக்ஸர் கொடுக்கவில்லை. பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் எடுத்த ஒற்றை ரன் ஓட்டம் மட்டுமே அந்த பந்தில் எடுக்கப்பட்ட ரன்னாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x