Published : 25 May 2025 08:48 AM
Last Updated : 25 May 2025 08:48 AM
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்தத் போட்டிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நேற்று மும்பையில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயதான இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
18 பேர் கொண்ட இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். உடற்தகுதி மற்றும் பணிச் சுமையை கருத்தில் கொண்டு ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படவில்லை என அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
2-வது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜூரெல் சேர்க்கப்பட்டுள்ளார். 3-வது தொடக்க வீரராக அபிமன்யு ஈஸ்வரன் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். 7 வருடங்களுக்குப் பிறகு கருண் நாயர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்குடன் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக நித்திஷ் குமார் ரெட்டி இடம் பெற்றுள்ளார்.
சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் பிரதான சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரீத் பும்ராவுடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உடற்தகுதியை கருத்தில் கொண்டு முகமது ஷமி சேர்க்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்றிருந்த சர்பராஸ் கான், ஹர்திஷ் ராணா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் ஸ்ரேயஸ் ஐயருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி எதிர்கொள்ள உள்ள முதல் டெஸ்ட் தொடராக இங்கிலாந்து சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.
இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன், கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (துணை கேப்டன்), துருவ் ஜூரல், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங்.
5-வது இளம் கேப்டன்: இந்திய அணியின் 5-வது இளம் டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் 25 வயதான ஷுப்மன் கில். இந்த வகையில் மன்சூர் அலி கான் பட்டோடி (21), சச்சின் டெண்டுல்கர் (23), கபில் தேவ் (24), ரவி சாஸ்திரி (25) ஆகியோர் தங்களது இளம் வயதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் கில் சராசரி என்ன? - 2020-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஷுப்மன் கில் இதுவரை 32 போட்டிகளில் விளையாடி 35.05 சராசரியுடன் 1,893 ரன்கள் சேர்த்துள்ளார். 5 சதங்கள், 7 அரை சதங்கள் அடித்துள்ளார். எனினும் சேனா (SENA) நாடுகள் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் ஷுப்மன் கில் தனது திறனை நிரூபிக்கவில்லை. இங்கிலாந்தில் ஷுப்மன் கில் 3 டெஸ்டில் விளையாடி உள்ளார். அங்கு அவரது சராசரி 14.66 ஆகும்.
அனுபவம் எப்படி? - முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில் 5 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் ஓர் ரஞ்சி கோப்பை ஆட்டமும் அடங்கும். அதேவேளையில் ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
8 வருடங்களுக்குப் பிறகு: கருண் நாயர் கடைசியாக 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், ஒரு சதத்துடன் 374 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 62.33 ஆகும். இங்கிலாந்துக்கு எதிராக 2016-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முச்சதம் (303* ரன்கள்) விளாசியிருந்தார்.
இங்கிலாந்து தொடர் அட்டவணை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT