Published : 24 May 2025 12:13 PM
Last Updated : 24 May 2025 12:13 PM
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க ஆண்டான 2008-ல் அரை இறுதிக்கு முன்னேறியிருந்தது. இதன் பின்னர் பிளே ஆஃப் சுற்று அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 2014-ம் ஆண்டு அந்த அணி லீக் சுற்றில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. இதுவரை முடிவடைந்துள்ள 17 சீசன்களிலும் பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே சீசன் அது மட்டுமே.
நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றில் நுழைந்து 11 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது லீக் சுற்றை முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்வதோடு மட்டுமல்லாமல், இறுதிப் போட்டியிலும் நுழைந்து, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதற்கான முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 17 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாயினிஸ், ஜோஷ் இங்லிஷ், ஆரோன் ஹார்டி, நியூஸிலாந்தின் கைல் ஜேமிசன் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர். இது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும்.
பேட்டிங்கில் 458 ரன்கள் குவித்துள்ள பிரப்சிம்ரன் சிங், 435 ரன்கள் விளாசியுள்ள ஸ்ரேயஸ் ஐயர், 356 ரன்கள் சேர்த்துள்ள பிரியன்ஷ் ஆர்யா ஆகியோர் டாப் ஆர்டரில் வலுவாக உள்ளனர். டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட தவறும் பட்சத்தில் நடுவரிசையில் நேஹல் வதேரா, ஷசாங் சிங் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேஹல் வதேரா 37 பந்துகளில் 70 ரன்களும், ஷசாங் சிங் 30 பந்துகளில் 59 ரன்களையும் விளாசி மிரட்டியிருந்தனர்.
பந்துவீச்சில் 13 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள யுவேந்திர சாஹல், 11 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள அர்ஷ்தீப் சிங், கிடைக்கும் வாய்ப்புகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தி வரும் ஹர்பிரீத் பிரார் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். இவர்களுடன் சேவியர் பார்ட்லெட், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடும்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவு இல்லா ஆட்டம் என 13 புள்ளிகளை பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. கடந்த 21-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை டெல்லி அணி பறிகொடுத்து இருந்தது.
அந்த ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் இல்லாதது, கேப்டன் அக்சர் படேல் உடல் நிலை சரியில்லாததால் களமிறங்காதது உள்ளிட்டவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. பந்துவீச்சில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பேட்டிங்கில் பவர்பிளேவில் தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்த முடியாததும் அணியின் பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. எனினும் கடைசி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் டெல்லி அணி கவனம் செலுத்தக்கூடும். ஆனால் பலம் வாய்ந்த பஞ்சாப் அணிக்கு எதிராக அது எளிதாக இருக்கப்போது இல்லை.
முலான்பூர் டூ ஜெய்ப்பூர்.. ஐபிஎல் தொடரில் கடந்த 8-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் முலான்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டம் 10.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக போட்டியை பிசிசிஐ உடனடியாக நிறுத்தியிருந்தது. இந்த ஆட்டமே இன்று முதலில் இருந்து நடத்தப்பட உள்ளது. முலான்பூருக்கு பதிலாக ஜெய்ப்பூரில் போட்டி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT