Published : 23 May 2025 11:40 AM
Last Updated : 23 May 2025 11:40 AM
சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் ஆட்டங்கள் அதன் இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை என நான்கு அணிகள் முன்னேறியுள்ளன. வழக்கமாக கடைசி நேரத்தில் லீக் ஆட்டங்களில் நிலவும் பரபரப்பும், அழுத்தமும் இந்த முறை இல்லை. மாறாக லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் ‘டாப் 2’ இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டி தான் இந்த 4 அணிகளுக்கும் இடையே நிலவுகிறது.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியை 33 ரன்களில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இதனால் லீக் சுற்றுக்கான புள்ளிப்பட்டியலில் டாப் 2 அணிகளில் ஒன்றாக குஜராத் அணி நிறைவு செய்வதற்கான வாய்ப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 13 ஆட்டங்களில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளை பெற்றுள்ளது அந்த அணி. 25-ம் தேதி நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே உடன் விளையாடுகிறது. அதில் அந்த அணி வெற்றி பெற வேண்டி உள்ளது. அது நடந்தால் குஜராத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
ஆர்சிபி அணிக்கான வாய்ப்பு எப்படி? - பட்டியலில் தற்போது 2-வது இடத்தில் உள்ளது ஆர்சிபி. லக்னோ உடனான ஆட்டத்தில் குஜராத் தோல்வி கண்டது ஆர்சிபி அணிக்கான வாய்ப்பு பிரகாசம் அடைந்துள்ளது. 12 ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்றுள்ளது ஆர்சிபி. 17 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி, எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் பட்டியலில் டாப் 2 அணிகளில் ஒன்றாக இடம்பெறும்.
அந்த அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் ஒரு வெற்றி பெற்றால் கூட டாப் 2 இடத்தில் நிறைவு செய்யலாம். ஆனால், அதற்கு குஜராத் அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியடைய வேண்டும், பஞ்சாப் அணியும் ஒரு ஆட்டத்தில் தோல்வியடைய வேண்டும். ஆர்சிபி விளையாட உள்ள 2 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவினால் டாப் 2 இடத்தில் நிறைவு செய்ய முடியாது.
பஞ்சாப் அணிக்கான வாய்ப்பு எப்படி? - பஞ்சாப் அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். அது நடந்தால் 21 புள்ளிகளுடன் டாப் 2 இடத்தை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி பிடிக்கும். அந்த அணி ஒரு ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் கூட டாப் 2 இடத்தில் நிறைவு செய்ய முடியாத சூழல் உள்ளது. ஏனெனில், அந்த அணியின் நெட் ரன் ரேட் அதற்கு காரணமாக அமைந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸுக்கு எப்படி? - மும்பை இந்தியன்ஸ் அணி எஞ்சியுள்ள ஒரு லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் ‘டாப் 2’ ரேஸில் உள்ள மற்ற அணிகளின் ஆட்ட முடிவுகளை பொறுத்தே அது அமையும். கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியை தழுவினால் எலிமினேட்டரில் விளையாட வேண்டும்.
ஏன் ‘டாப் 2’ இடத்துக்கு டிமாண்ட்? - ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான ரேஸில் லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளும். இதில் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இரு முறை கிடைக்கும். இந்த இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றில் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் விளையாடும். அதில் வெல்லும் அணி இறுதிக்கு நேரடியாக முன்னேறும். தோல்வியை தழுவும் அணி இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் விளையாடும்.
மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடும். இதில் வெல்லும் அணி இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறும். குவாலிபையர் 2-வில் வெற்றி பெறுகின்ற அணி இறுதிக்கு முன்னேறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT