Published : 22 May 2025 06:01 PM
Last Updated : 22 May 2025 06:01 PM
பெங்களூரு: இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தலுக்கு மாற்று வீரராக நியூஸிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிம் செய்ஃபெர்ட்டை ஒப்பந்தம் செய்துள்ளது ஆர்சிபி அணி. இது குறித்து அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நாளை (மே 23) நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான லீக் ஆட்டத்தில் ஜேக்கப் பெத்தல் விளையாடுவார். அதன் பின்னர் அவர் இங்கிலாந்து அணியுடன் இணைய உள்ளார். வரும் 29-ம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் இங்கிலாந்து விளையாட உள்ளது. அந்த தொடருக்கான அணியில் பெத்தல் இடம்பெற்றுள்ளார்.
டிம் செய்ஃபெர்ட்: 30 வயதான டிம் செய்ஃபெர்ட், நியூஸிலாந்து அணிக்காக கடந்த 2018 முதல் 66 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1540 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் ஆவரேஜ் 28 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 142 என உள்ளது. கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். டாப் ஆர்டரில் விளையாடும் திறன் கொண்ட பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சீசனுக்கான புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 12 ஆட்டங்களில் 8 வெற்றி மற்றும் 3 தோல்விகளை பெற்றுள்ளது ஆர்சிபி. மழை காரணமாக ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. அந்த அணி லீக் சுற்றில் இன்னும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டி உள்ளது. அதில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் டாப் 2 அணிகளில் ஒன்றாகவே முதல் சுற்றை நிறைவு செய்ய ஆர்சிபி முயலும்.
18 ஐபிஎல் சீசன்களில் விளையாடி உள்ள ஆர்சிபி அணி இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றது இல்லை. அதை இந்த சீசனில் ஆர்சிபி தகர்க்கும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT