Published : 22 May 2025 06:11 AM
Last Updated : 22 May 2025 06:11 AM

இளம் வீரர்கள் நெருக்கடியில் சிக்கக்கூடாது: சிஎஸ்கே கேப்டன் தோனி அறிவுரை

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 8 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 20 பந்துகளில் 43 ரன்களும், டெல்வால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில், 42 ரன்களும் விளாசினர்.

ஷிவம் துபே 32 பந்துகளில் 39 ரன்களும், தோனி 17 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே 7.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஆனால் டெவால்ட் பிரேவிஸ் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இருப்பினும் அவர் ஆட்டமிழந்த பின்னர் ஷிவம் துபே, தோனி ஜோடி பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் தொடுக்கவில்லை.

இதனால் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட வேண்டிய நிலையில் 187 ரன்களுக்குள் முடங்கியது சிஎஸ்கே அணி. கடைசி 3 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. ஆகாஷ் மத்வால், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் அற்புதமாக செயல்பட்டு சிஎஸ்கே அணியின் ரன்வேட்டை இறுதிக்கட்ட ஓவர்களில் அடியோடு கட்டுப்படுத்தினர். 188 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 33 பந்துகளில் 57 ரன்களும், சஞ்சு சாம்சன் 41, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36, துருவ் ஜூரெல் 31, ஷிம்ரன் ஹெட்மயர் 12 ரன்கள் சேர்த்தனர்.

சிஎஸ்கேவுக்கு இது 10-வது தோல்வியாக அமைந்தது. 13 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 10 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் வரும் 25-ம் தேதி குஜராத் டைட்டன்ஸுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் சிஎஸ்கே அணி லீக் சுற்றை கடைசி இடத்துடனே நிறைவு செய்யும். ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே கடைசி இடத்துடன் தொடரை நிறைவு செய்ய உள்ளது இதுவே முதன்முறையாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியதாவது:

சிறப்பான ஸ்கோரையே எடுத்தோம். ஆனால் விக்கெட்கள் வீழ்ச்சியானது கீழ்-நடுவரிசை வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தது. 20 ஓவர்களை முழுமையாக விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடி இருந்தது. டெவால்ட் பிரேவிஸ் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர், ரிஸ்க் எடுத்து பேட் செய்தார். ரன் ரேட்டும் சிறப்பாக இருந்தது. இந்த விஷயங்களில்தான் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். ரன் ரேட் உயர்வாக இருந்த நிலையிலும் கூடுதலா 2 விக்கெட்களை இழந்திருந்தோம்.

அன்ஷுல் கம்போஜ் ஸ்விங் ஆகும் பந்துகளை வீசக்கூடியவர் இல்லை. ஆனால் அவருக்கு கொஞ்சம் பந்தில் உள்ள தையல்களின் மூலும் நகர்வு கிடைத்தது. பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். அவர், யார்க்கர்களை சிறப்பாக வீசக்கூடியவர். பவர்பிளே பகுதியில்தான் எங்களுக்கு பெரிய ஓட்டை உள்ளது. முதல் 6 ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

அன்ஷுல் கம்போஜ் பவர் பவர்பிளேயில் 3 ஓவர்கள் வீசினார். பந்து அதிகம் நகராதபோதும், பேட்ஸ்மேன்கள் நன்றாகச் செயல்படும் போதும் இது கடினமாக இருக்கும். இளம் வீரர்கள் தொடர்ச்சியான செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும். 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் போது இது கடினமான விஷயம்தான். இளம் பேட்ஸ்மேன்களால் பவர்பிளே மட்டும் அல்லாமல் ஆட்டத்தின் எந்த சூழ்நிலையிலும் சிக்ஸர்கள் விளாச முடிகிறது. சுழற்பந்து வீச்சிலும் சிறப்பாக பேட் செய்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் அவர்கள், தங்களால் களத்தில் நீண்ட நேரம் விளையாட முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மேலும் அவர்கள், நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. ஒரு சீசனில் சிறப்பாக விளையாடினால் அடுத்த முறை அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இந்த அழுத்தம் பிறரால் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் வித்தியாசமாக எதையும் முயற்சிக்காமல் முதல் சீசனில் எப்படி விளையாடினார்களோ அதேபோன்று விளையாட வேண்டும்.

சீனியர் வீரர்கள், பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். தொடக்க பேட்ஸ்மேனோ, டாப் ஆர்டர் பேட்ஸ்மேனோ அணிக்கு எது முக்கியம் என்பதை அறிய வேண்டும். தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும்போதுதான் பேட்ஸ்மேனாக முன்னேற்றம் காண முடியும். இவைதான் இளம் வீரர்களுக்கு எனது அறிவுரை.

இவ்வாறு தோனி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x