Published : 21 May 2025 11:57 PM
Last Updated : 21 May 2025 11:57 PM
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற வாய்ப்பும், டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வியை தழுவினால் முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறும் நிலையிலும் இருந்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. காய்ச்சல் காரணமாக அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல், இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு மாற்ற அணியை டூப்ளஸி வழிநடத்தினார். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 27, நமன் தீர் 24, ரிக்கல்டன் 25, வில் ஜேக்ஸ் 21 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி இறுதி ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது.
181 ரன்கள் என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. தொடக்க முதலே சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான பந்து வீச்சு அதற்கு காரணமாக அமைந்தது. போல்ட், சான்ட்னர் (3), பும்ரா (3), தீபக் சஹர், வில் ஜேக்ஸ், கரன் சர்மா ஆகியோர் மும்பை தரப்பில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது டெல்லி அணி. இதன் மூலம் 59 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 11-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது மும்பை அணி. அந்த அணி இன்னும் ஒரு லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. அதில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்யும். அதே நேரத்தில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் இன்னும் 2 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT