Published : 21 May 2025 06:26 AM
Last Updated : 21 May 2025 06:26 AM
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்ததால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
3 அணிகள் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துவிட்ட நிலையில் கடைசி இடத்துக்கு 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. இந்த அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ஆடங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. டெல்லி அணி தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேறும்.
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்து விடும். மாறாக அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழும்.
ஏனெனில் டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் 15 புள்ளிகளை எட்டும். மும்பை அணி 14 புள்ளிகளுடனே இருக்கும். இது நிகழும் பட்சத்தில் டெல்லி அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தினால் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம்.
அதேவேளையில் மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. அது டெல்லி அணியின் கடைசி போட்டியின் முடிவை பொறுத்து அமையும். டெல்லி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைய வேண்டும். அதேவேளையில் மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டும். இது நிகழ்ந்தால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றில் நுழையும்.
மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. 2 வாரங்களுக்கு பிறகு தற்போது மும்பை அணி களம் காண்கிறது. இது ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கக்கூடும்.
ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் நடைபெறும் முதல் ஆட்டம் இது என்பதால் அவர், மீது எதிர்பார்ப்பு அதிகம் இருக்கக்கூடும். ரியான் ரிக்கெல்டன் சீரான தொடக்கம் கொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும். வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கார்பின் போஷ் ஆகியோர் அதிரடியில் பலம் சேர்க்கக்கூடும்.
கடந்த 5 ஆட்டங்களில் 3-ல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த திலக் வர்மா மீண்டும் மட்டையை சுழற்றுவதில் முனைப்பு காட்டக்கூடும். பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் தீபக் சாஹர் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்படத் தவறினார். இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
டெல்லி அணி முதல் 6 ஆட்டங்களில் 5 வெற்றிகளை குவித்து மிரட்டியது. ஆனால் அடுத்த 6 ஆட்டங்களில் அந்த அணியால் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற முடிந்தது. கடைசியாக குஜராத் அணிக்கு எதிராக 199 ரன்கள் குவித்த போதிலும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது. அந்த ஆட்டத்தில் சதம் விளாசிய கே.எல்.ராகுலிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும்.
பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் முஸ்டாபிஸூர் ரஹ்மான் மட்டுமே சராசரியாக ஓவருக்கு 8 ரன்களை வழங்கியிருந்தார். நடராஜன் 3 ஓவர்களை வீசி 49 ரன்களை தாரை வார்த்திருந்தார். குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகாம் ஆகியோரும் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுதிருந்தனர். அக்சர் படேல் 3 ஓவர்களை வீசி 35 ரன்ளை கொடுத்திருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி பந்துவீச்சு துறையை பலப்படுத்தக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT