Published : 20 May 2025 05:14 PM
Last Updated : 20 May 2025 05:14 PM

‘ரிஷப் பந்த்துக்கு இத்தனை கோடி செலவிட்டது தவறு’ - டாம் மூடி விமர்சனம்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் நேற்று தங்கள் சொந்த மண்ணில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வி அடைந்து பிளே அஃப் வாய்ப்பை இழந்ததை அடுத்து, லக்னோ அணியில் பெரிய களேபரமே உருவாகி விட்டது போலும். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி சர்ச்சைகளை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது. மேலும், நிகோலஸ் பூரனை ரூ.21 கோடிக்குத் தக்க வைத்தது. இந்த இரண்டு மிகப் பெரிய செலவினங்களால் லக்னோ அணி நல்ல பவுலிங் யூனிட்டாக பரிணமிக்க முடியாமல் போனது. நேற்று சன் ரைசர்ஸ் அணி 205 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி லக்னோவை வெளியேற்றியது. அபிஷேக் சர்மா லக்னோவின் பவுலிங்கை நாசம் செய்தார். குறிப்பாக, அங்கு நன்றாக வீசும் ரவி பிஷ்னாயை ஒரே ஓவரில் 26 ரன்களை 4 சிக்சர்களுடன் விளாசித் தள்ளினார். மற்ற பவுலர்களுக்கும் சரியான அடி.

தன் இஷ்டத்திற்கு சிக்சர்களையும் பவுண்டரிகளையும் விளாசி 20 பந்துகளில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 59 ரன்களை விளாசித் தள்ளினார். இஷான் கிஷன், கமிந்து மெண்டிஸ், ஹென்றிக் கிளாசன் ஆகியோரும் லக்னோ பந்து வீச்சை மைதானம் முழுக்கச் சிதறடிக்க வெற்றி சுலபமானது. லக்னோவின் இதயத்தில் இடி விழுந்தது. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.

ரிஷப் பந்த்துக்கு இது ஒரு மோசமான ஐபிஎல் தொடராக அமைந்தது. லக்னோ உரிமையாளர் வெளிப்படையாகவே நேற்று ரிஷப் பந்த் ஆட்டமிழந்தபோது தன் அதிருப்தியை தெரிவிக்குமாறு செய்கை செய்தார்.

இந்நிலையில், பவுலிங் லைன் அப் சரியாக இல்லாததால் லக்னோ வெளியேறியது என்று கூறிய டாம் மூடி, “ரிஷப் பந்த் மற்றும் நிகோலஸ் பூரன் மீது செலவிட்ட மிகப் பெரிய தொகையினால் நல்ல பவுலிங் யூனிட்டைக் கட்டமைக்க முடியாமல் போனது. ஏலத்தில் மற்ற பவுலர்களை எடுக்க போதிய நிதி ஆதாரம் இல்லாமல் போய்விட்டது.

உண்மையில் பூரன், மில்லர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் ஆகியோர் ஓர் அணியில் இருப்பது பிரமாதமானதே. இவர்கள் தாக்கம் ஏற்படுத்தும் பேட்டர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் என்ன செய்தாலும் நல்ல பவுலிங் வீசினால்தான் வெற்றி சாத்தியம். பவர் ப்ளேயில் தாக்கம் செலுத்தும் பவுலர்கள் தேவை, ஆனால் லக்னோவில் அப்படி யாரும் இல்லை.

மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியினரை நசுக்க வேண்டும். அந்த பவுலிங்கும் இல்லை. கடைசியில் விக்கெட்டுகளை வீழ்த்தும் டைட் பண்ணும் தாக்கம் ஏற்படுத்தும் பவுலர்கள் தேவை. இது எதுவும் லக்னோவிடம் இல்லை” என்று கூறினார் டாம் மூடி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x