Published : 20 May 2025 07:08 AM
Last Updated : 20 May 2025 07:08 AM
புதுடெல்லி: ஐபிஎல் டி 20 தொடரில் குஜராத் அணியின் அபார வெற்றியால் அந்த அணியுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் அணிகளும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளன. மீதம் உள்ள ஓர் இடத்துக்கு மும்பை, லக்னோ, டெல்லி அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. 200 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி சாய் சுதர்சன் 61 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் விளாசிய 108 ரன்கள் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் 53 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் விளாசிய 93 ரன்கள் உதவியுடன் 6 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது.
குஜராத் அணிக்கு இது 9-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது குஜராத் அணி. அந்த அணி 12 ஆட்டங்களில் 9 வெற்றி, 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குஜராத் அணியின் வெற்றியால் ஆர்சிபி, பஞ்சாப் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
ஆர்சிபி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 17 புள்ளிகள் குவித்து 2-வது இடத்திலும், பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 17 புள்ளிகள் குவித்து 3-வது இடத்திலும் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் 13 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டம் நீங்கலாக) 10 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன. இதில் மும்பை, டெல்லி அணிகளுக்கு தலா 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. லக்னோ அணிக்கு நேற்றைய ஆட்டம் (ஹைதராபாத்துக்கு எதிராக) உட்பட 3 ஆட்டங்கள் இருந்தன.
இந்த வகையில் அதிகபட்சமாக மும்பை அணி 18 புள்ளிகளையும், டெல்லி அணி 17 புள்ளிகளையும், லக்னோ அணி 16 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். இதன் அடிப்படையிலேயே ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் கால் பதித்துள்ளன. 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில் மீதம் உள்ள ஓர் இடத்துக்கு மும்பை, டெல்லி, லக்னோ அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.
டெல்லி கேப்பிடல்ஸ் எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் (21-ம் தேதி), பஞ்சாப் கிங்ஸ் (24-ம் தேதி) அணிகளுடன் மோத உள்ளது. இந்த 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே டெல்லி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். மும்பை அணியிடம் தோல்வி அடைந்தால் டெல்லி அணி தொடரில் இருந்து வெளியேறும்.
14 புள்ளிகளுடன் உள்ள மும்பை அணி: டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தாலும் கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும். ஆனால் இது நிகழவேண்டுமானால் டெல்லி அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைய வேண்டும். மேலும் லக்னோ அணி தனது எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஏதேனும் ஒன்றில் தோற்க வேண்டும். லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் தனது எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். இது நிகழ்ந்தாலும் டெல்லி, மும்பை அணிகள் தங்களது ஆட்டங்களில் தோல்விகளை சந்திக்க வேண்டும்.
முதல் இரு இடங்களுக்கு குறி.. குஜராத் டைட்டன்ஸ் அணி பகேற்ற 4 சீசன்களில் 3-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் ஆர்பிசி அணி கடந்த 6 வருடங்களில் 5-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளது. பஞ்சாப் அணி 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் லீக் சுற்றை முதல் 4 இடங்களுக்குள் நிறைவு செய்ய உள்ளது. 3 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட போதிலும் லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படக்கூடும். ஏனெனில் முதல் இரு இடங்களுக்குள் லீக் சுற்றை நிறைவு செய்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு அந்த அணிகளுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மாறாக தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இதன்படி அந்த அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும். இதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT