Published : 20 May 2025 06:54 AM
Last Updated : 20 May 2025 06:54 AM
புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பிளே ஆஃப்சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்று 10 அணிகள் கலந்து கொண்டுள்ள தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 10 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு இது கடைசி ஆட்டமாகும். இதனால் அந்த அணி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில்கவனம் செலுத்தக்கூடும். பந்துவீச்சில் விவேகம் இல்லாத வீரர்கள், பேட்டிங்கில் பலம் இல்லா நடுவரிசை ஆகியவற்றால் ராஜஸ்தான் அணி தொடர்ச்சியான தோல்விகளை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 9-வது இடத்தில் இருப்பதற்கு காரணம் பல்வேறு ஆட்டங்களில் பந்துவீச்சாளர்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாததும், பேட்டிங்கில் டாப் ஆர்டரை மட்டுமே நம்பி இருந்ததும்தான். பந்துவீச்சில் அணி நிர்வாகம் ஜோப்ரா ஆர்ச்சரை பெரிதும் நம்பியிருந்தது. ஆனால் அவரிடம் இருந்து உயர்மட்ட செயல் திறன் வெளிப்படவில்லை. மேலும் இந்திய பந்துவீச்சாளர்களிலும் நட்சத்திர வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.
மும்பை அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட் மற்றும் குஜராத் அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்று குறிப்பிட்டு கூறும் வகையில் வலுவான பந்துவீச்சாளர்கள் யாரும் ராஜஸ்தான் அணியில் இல்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 220 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில் முதல் 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 70-க்கும் அதிகமான ரன்களை குவித்தது. ஆனால் இறுதியில் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நடப்பு சீசனில் பல்வேறு ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி இதுபோன்று தோல்விகளை சந்தித்து இருந்தது.
சிஎஸ்கே இளம் வீரர்களான ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷித், உர்வில் படேல், டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரை கொண்டு அணியை புதிதாக கட்டமைத்துள்ளது. இவர்களது துணிச்சலான பேட்டிங் அணுகுமுறை சில நேர்மறையான விஷயங்களை அணிக்கு கொடுத்துள்ளது. சேம் கரண், ஜேமி ஓவர்டன் ஆகியோர் அணியுடன் மீண்டும் இணையவில்லை. இதனால் மேலும் சில இளம் வீரர்களுக்கு விளையாடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT