Published : 19 May 2025 06:14 AM
Last Updated : 19 May 2025 06:14 AM
பெங்களூரு: மழையால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து பிளே ஆப் சுற்றிலிருந்து 4-வது அணியாக கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. ஆனால் பெங்களூருவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. தற்போது 4-வது அணியாக கொல்கத்தா அணியும் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
---------------------------------
40 ஆண்டுகளுக்குப் பின் இத்தாலி ஓபனில் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை: 40 ஆண்டுகளுக்குப் பின் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீராங்கனை ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோர் மோதினர். இதில் பவுலினி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் சாதனை புரிந்தார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை ஒருவர் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு நடைபெற்ற இத்தாலி ஓபனில், இத்தாலி வீராங்கனை ரபேல்லா ரெக்கி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT