Published : 17 May 2025 07:02 AM
Last Updated : 17 May 2025 07:02 AM

ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடக்கம்: பெங்களூரு - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை

பெங்களூரு: ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று 17-ம் தேதி) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பின்னர் 29, 30 ஜூன் 1-ம் தேதிகளில் பிளே ஆஃப் சுற்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகின்றது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 10 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் ஐபிஎல் தொடர் நடைபெறுவது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுதியுள்ளது. ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். எனினும் அந்த அணி லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படக்கூடும். அஜிங்க்ய ரஹானே தலைமையிலான நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் லீக் சுற்றை 15 புள்ளிகளுடனே நிறைவு செய்யும். இது நிகழ்ந்தாலும் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே முடிவாகும். மாறாக இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.

பெங்களூரு அணி தனது கடைசி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நிலையில் களமிறங்குகிறது. அதேவேளையில் கொல்கத்தா அணி கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி கண்ட நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் விரலில் காயம் அடைந்திருந்த பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கடந்த இரு தினங்களாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவதில் பிரச்சினை இருக்காது என்றே கருதப்படுகிறது. வெளிநாட்டு வீரர்களில் பில் சால்ட், லுங்கி நிகிடி, டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்டன், ரோமாரியோ ஷெப்பர்டு ஆகியோர் பெங்களூரு அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டியது இருப்பதால் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் மட்டுமே திரும்பவில்லை.

மேலும் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படகிறது. காயம் காரணமாக விலகியுள்ள தேவ்தத் படிக்கலுக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவருக்கு விளையாடும் லெவனில் இடம் கிடைக்கக்கூடும். நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்த பிறகு கலந்து கொள்ளும் முதல் போட்டியாக இன்றைய ஆட்டம் அமைந்துள்ளதால் அவர், மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இந்த சீசனில் பேட்டிங் பலவீனமாக உள்ளது. அஜிங்க்ய ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோரை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களிடம் இருந்து தொடர்ச்சியாக சிறந்த செயல் திறன் வெளிப்படவில்லை. இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வெங்கடேஷ் ஐயர், ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக செயல்படுதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

அதேவேளையில் பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் ஒருங்கிணைந்த செயல் திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு நகரில் மழை பொழிவதற்கான வாய்ப்பு 65 சதவீதம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x