Published : 16 May 2025 07:18 AM
Last Updated : 16 May 2025 07:18 AM
புதுடெல்லி: குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், தேசிய அணிக்காக விளையாட வேண்டியது இருப்பதால் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறார். இதனால் பிளே ஆஃப் சுற்றில் அவருக்கு பதிலாக இலங்கை வீரர் குஷால் மெண்டிஸை குஜராத் அணி ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் நாளை (17-ம் தேதி) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி லீக் ஆட்டங்கள் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பின்னர் 29, 30 ஜூன் 1-ம் தேதிகளில் பிளே ஆஃப் சுற்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகின்றது.
திருத்தி அமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இங்கிலாந்து, வரும் 29-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகுவதற்கு பயிற்சியில் ஈடுபட வேண்டியது உள்ளது.
இந்நிலையில் ஜாஸ் பட்லர், குஜராத் டைட்டன்ஸ் அணியின் எஞ்சிய லீக் ஆட்டங்களில் மட்டும் விளையாடுவார் எனவும் அதன் பின்னர் அவர், இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்க தாயகம் புறப்பட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் டெல்லி கேப்பிடல்ஸ் (மே 18), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (மே 22), சென்னை சூப்பர் கிங்ஸ் (மே 25) ஆகிய அணிகளுடன் மோதுகிறது.
பிளே ஆஃப் சுற்றில் ஜாஸ் பட்லருக்கு பதிலாக இலங்கையைச் சேர்ந்த குஷால் மெண்டிஸை ஒப்பந்தம் செய்வதற்கான நடவடிக்கையில் குஜராத் அணி களமிறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள இங்கிலாந்தின் மொயின் அலி காயம் காரணமாக மீண்டும் அணியுடன் இணையவில்லை. இதேபோன்று அதிரடி வீரரான ரோவ்மன் பாவெலும் (மேற்கு இந்தியத் தீவுகள்) காயம் காரணமாக கொல்கத்தா அணிக்கு திரும்பவில்லை.
அதேவேளையில் ஜோப்ரா ஆர்சச்ர் (ராஜஸ்தான்), சேம் கரண், ஜேமி ஓவர்டன் (சிஎஸ்கே) ஆகியோரும் திரும்பமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் ஆகியோர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மீண்டும் இணைவதை உறுதி செய்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜேக் பிரேசர் மெக்கர்க்குக்கு பதிலாக ஒப்பந்தம் செய்துள்ள வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்க முஸ்டாபிஸூர் ரஹ்மானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை.
முஸ்டாபிஸூர் ரஹ்மான் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார். அங்கு வரும் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடைபெறும் டி 20 தொடர்களில் பங்கேற்கிறார். இதனால் இந்த விவகாரத்தில் பிசிசிஐ-யின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்நோக்கி உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சன் மீண்டும் அணியில் இணைய உள்ளார். ஆனால் லீக் ஆட்டங்கள் முடிவடைந்ததும் தாயகம் புறப்பட்டுச் சென்று தேசிய அணியுடன் இணைய உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT