Published : 15 May 2025 05:29 PM
Last Updated : 15 May 2025 05:29 PM
மும்பை: நடப்பு ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் சியர் லீடர்ஸ் மற்றும் டிஜே போன்ற கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதை பிசிசிஐ பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது நடப்பு சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள். இந்நிலையில், போர் நிறுத்த அறிவிப்பின் எதிரொலியாக, வரும் சனிக்கிழமை (மே 17) முதல் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
“நடப்பு ஐபிஎல் சீசனில் கடைசி சில போட்டிகள் மட்டுமே விளையாட வேண்டி உள்ளது. அண்மையில் நடந்த சம்பவத்தால் அன்பான உறவுகளை சில குடும்பங்கள் இழந்து, தவிப்பில் உள்ளன. இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்களுக்கு இடையில் ஒலிக்கப்படும் டிஜே இசை மற்றும் சியர் லீடர்ஸ் போன்றவை வேண்டாம் என நினைக்கிறேன்.
எஞ்சியுள்ள போட்டிகளில் கிரிக்கெட் மட்டும் விளையாட வேண்டும். பார்வையாளர்கள் வந்து ஆட்டத்தை பார்க்கட்டும். இந்த ஏற்பாடு அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கு நாம் வழங்கும் மதிப்பாக இருக்கும்” என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதை பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. ஏற்கெனவே இந்த சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT