Published : 15 May 2025 07:01 AM
Last Updated : 15 May 2025 07:01 AM
ஜோகன்னஸ்பர்க்: இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் வரும் 17-ம் தேதி மீண்டும் தொடங்கும் என பிசிசிஐ கடந்த 12-ம் தேதி அறிவித்தது. திருத்தியமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையின்படி லீக் ஆட்டங்கள் வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று 29, 30 மற்றும் ஜூன் 1-ம் தேதியும் இறுதிப் போட்டி 3-ம் தேதியும் நடைபெறுகின்றன.
இதனால் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ள வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் திருப்பி அனுப்ப நடடிவக்கை எடுக்கும்படி ஐபிஎல் அணிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
சிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வரும் ஜூன் 11-ம் தேதி லண்டனில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடும் காகிசோ ரபாடா (குஜராத் டைட்டன்ஸ்), லுங்கி நிகிடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்), எய்டன் மார்க்ரம் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்), ரியான் ரிக்கல்டன் (மும்பை இந்தியன்ஸ்), கார்பின் போஷ் (மும்பை இந்தியன்ஸ்), மார்கோ யான்சன் (பஞ்சாப் கிங்ஸ்), வியான் முல்டர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஆகிய 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதனால் இவர்களை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க திருப்பி அனுப்புவது கடினம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் தொடரின் பழைய அட்டவணையின்படி இறுதிப் போட்டி மே 25-ம் தேதி முடியும் வகையில் இருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் 26-ம் தேதி தாயகம் திரும்பும் வகையில் திட்டமிட்டு இருந்தனர். இதன் பின்னர் 30-ம் தேதி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க புறப்பட்டுச் செல்ல முடிவு செய்திருந்தனர். இந்த திட்டத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இப்போதும் உறுதியாக உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறும்போது, “ஐபிஎல்-பிசிசிஐ உடனான எங்கள் ஆரம்ப ஒப்பந்தம், இறுதிப் போட்டி 25-ம் தேதி நடைபெறும், எங்கள் வீரர்கள் 26-ம் தேதி தாயகம் திரும்புவார்கள் என்பதுதான். ஏனெனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக 30-ம் தேதி நாங்கள் புறப்படுவதற்கு முன்பு வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். தற்போதைய நிலையில், நாங்கள் இதில் பின்வாங்கவில்லை. எங்கள் வீரர்கள் 26-ம் தேதி திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT