Published : 14 May 2025 12:26 AM
Last Updated : 14 May 2025 12:26 AM
மும்பை: இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் தொடரில் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் 10.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் புறப்பட்டுச் சென்றனர். இந்திய வீரர்களுக்கும் தங்களது சொந்த நகரை அடைந்தனர். இந்நிலையில் 11-ம் தேதி மாலை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டது.
இந்த வகையில் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி நிறுத்தி வைக்கப்பட்ட தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள லீக் ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டும் நடைபெறுகிறது. மே 29-ம் தேதி முதல் தகுதிச்சுற்று ஆட்டமும், 30-ம் தேதி எலிமினேட்டர் ஆட்டமும், ஜூன் 1-ம் தேதி 2-வது தகுதி சுற்று ஆட்டமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகுடம் சூடப்போதுவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது. பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்கு இன்னும் இரு ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் பழைய அட்டவணையின் படி சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதாக இருந்தது.
ஆனால் திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையில் சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தை வரும் 25-ம் தேதி அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. முன்னதாக 20-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. மே 8-ம் தேதி தரம்சாலாவில் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
இந்நிலையில் மாற்றியமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையில் ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்து கொள்வது சந்தேகம் என்று கூறப்படுகிறது. அந்த அணி வரும் ஜூன் 11-ம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி ஜூன் முதல் வாரத்திலேயே லண்டன் புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மிட்செல் ஸ்டார்க் (டெல்லி கேப்பிடல்ஸ்), பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்) ஆகியோர் மீண்டும் இந்தியா வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையே ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் முடிவை வீரர்கள் வசமே விட்டுவிட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அதேவேளையில் டெல்லி அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது.
இந்நிலையில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. ஐபிஎல் தொடரில் பங்கேற்க தங்களது வாரியங்களை சேர்ந்த வீரர்கள் திரும்புவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. இந்தியாவுக்குத் திரும்புவது குறித்து வீரர்கள் கொண்டிருக்கக்கூடிய கவலைகளைப் போக்க, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் தனித்தனியாகப் பேசுமாறு ஐபிஎல் தலைமை செயல் அதிகாரியான ஹேமங் அமீனுக்கு பிசிசிஐ உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து 10 அணிகளும் வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைத்து வருவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாங்கள் வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் தனித்தனியாகப் பேசி வருகிறோம், அதே நேரத்தில் வீரர்கள் தங்கள் அணிகளுடன் தொடர்பில் உள்ளார்கள். பெரும்பாலானோர் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் கூறும்போது, “திருத்தப்பட்ட ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களை தொடர்பு கொள்ளத் தொடங்கி உள்ளோம். இந்த விஷயத்தில் நாளை (இன்று) காலைக்குள் எங்களுக்கு தெளிவு கிடைத்துவிடும். எப்படியிருந்தாலும் எங்களுக்கு மே 20-ம் தேதிதான் போட்டி உள்ளது. இதனால் எங்களுக்கு போதுமான நேரம் இருக்கிறது" என்றார்.
சிஎஸ்கே அணியில் டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா (நியூஸிலாந்து), சேம் கரண், ஜேமி ஓவர்டன் (இங்கிலாந்து), நூர் அகமது (ஆப்கானிஸ்தான்), மதீஷா பதிரனா (இலங்கை) ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாயினிஸ், ஜோஷ் இங்லிஷ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் சேவியர் பார்ட்லெட், ஆரோன் ஹார்டி (ஆஸ்திரேலியா), அஸ்மதுல்லா ஓமர்ஸாய் (ஆப்கானிஸ்தான்), மார்கோ யான்சன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் திரும்பிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உதவி பயிற்சியாளர்கள் பிராட் ஹடின், ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆகியோர் இந்தியாவிலேயே தங்கியுள்ளனர்.
பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? - தற்போதைய நிலையில் குஜராத் டைட்டன்ஸ் (நிகர ரன் விகிதம் 0.793), பெங்களூரு (நிகர ரன் விகிதம் 0.482) ஆகிய அணிகள் 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளும் எஞ்சியுள்ள தலா 3 ஆட்டங்கள் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்து விடும்.
பஞ்சாப் கிங்ஸ் 11 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்த அணியும் மேற்கொண்டு ஒரு வெற்றியை வசப்படுத்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 12 ஆட்டங்களில் விளையாடி 14 புள்ளிகளுடன் உள்ள மும்பை இந்தியன்ஸ், 11 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளை பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகளுள் ஏதேனும் ஒன்றே பிளே ஆஃப் சுற்றில் நுழையக்கூடிய கடைசி அணியாக இருக்கக்கூடும்.
சுவாரஸ்சியமாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதக்கூடிய ஆட்டமும் உள்ளது. மும்பை அணி எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இது நிகழ்ந்தால் அந்த அணி 18 புள்ளிகளுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் அடுத்தகட்டத்துக்கு முன்னேறும். அதேவேளையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்க முடியும்.
11 ஆட்டங்களில் 10 புள்ளிகள் பெற்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 12 ஆட்டங்களில் 11 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தங்களது எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது தெரிய வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT