Published : 11 May 2025 08:52 AM
Last Updated : 11 May 2025 08:52 AM
ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 2 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் மதுரா தாமங்கோங்கர் 139-138 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கார்சன் கிராஹேவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் அபிஷேக் வெர்மா, ஓஜஸ் தியோடேல், ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 232-228 என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் மதுரா தாமங்கோங்கர், ஜோதி சுரேகா, ஷிகிதா தனிபர்த்தி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 221-234 என்ற கணக்கில் மெக்சிகோ அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மதுரா தாமங்கோங்கர், அபிஷேக் வெர்மா ஜோடி 144-142 என்ற கணக்கில் மலேசிய ஜோடியை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ரிஷப் யாதவ், தென் கொரியாவின் கிம் ஜோங்கோவுடன் மோதினார். இந்த ஆட்டம் 145-145 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற் ஷூட்-ஆஃப்பில் ரிஷப் யாதவ் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த தொடரில் இதுவரை காம்பவுண்ட் பிரிவில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இன்று கடைசி நாள் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா மேலும் 3 பதக்கங்களை வெல்ல களமிறங்குகிறது. இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடுகிறது. மேலும் பார்த் சாலுங்கே, தீபிகா குமாரி ஆகியோர் அரை இறுதி சுற்றில் விளையாடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT