Published : 03 May 2025 07:29 AM
Last Updated : 03 May 2025 07:29 AM
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.
ரியான் ரிக்கெல்டன் 38 பந்துகளில், 61 ரன்களும் ரோஹித் சர்மா 36 பந்துகளில், 53 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்களும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 48 ரன்களும் விளாசி மிரட்டினர். 218 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 2 பந்துகளில், ரன்கள் ஏதும் சேர்க்காமல் தீபக் ஷாகர் பந்தில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13, நிதிஷ் ராணா 9, கேப்டன் ரியான் பராக் 16, துருவ் ஜூரெல் 11, ஷிம்ரன் ஹெட்மயர் 0, ஷூபம் துபே 15, சோப்ரா ஆர்ச்சர் 30, தீக்சனா 2, குமார் கார்த்திக்கேயா 2 ரன்களில் நடையை கட்டினர்.
மும்பை அணி சார்பில் டிரெண்ட் போல்ட், கரண் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ராஜஸ்தான் அணிக்கு இது 8-வது தோல்வியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றி, 8 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
அதேவேளையில் 7-வது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 11 ஆட்டங்களில் 7 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4 தோல்விகளை சந்தித்திருந்த மும்பை அணி அதன் பின்னர் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்து அசத்தியுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: பேட்டிங், பந்துவீச்சில் முழுமையான செயல் திறனை வெளிப்படுத்தினோம். எனினும் பேட்டிங்கில் நாங்கள் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அதை தவறவிட்டுவிட்டோம். நானும், சூர்யகுமார் யாதவும் களத்தில் பேச முயற்சித்தது கிரிக்கெட் ஷாட்களை விளையாடுவது பற்றிதான். பீல்டிங் இடைவெளிகளை கண்டறிந்து ஷாட்களை மேற்கொண்டால் அதற்கு மதிப்பு உள்ளது.
ரோஹித் சர்மாவும், ரியான் ரிக்கெல்டனும் அப்படிதான் விளையாடினார்கள். ரியான் ரிக்கெல்டன் பவுண்டரி எல்லைகளை குறித்து விளையாடிய விதம் அருமையாக இருந்தது. வாய்ப்புகளைவிட சூழ்நிலைக்கு என்ன தேவை என்பதை அறிந்து விளையாடுவதில்தான் அனைத்தும் உள்ளது. பந்துவீச்சில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல எனக்கு தெரியவில்லை.
எங்களிடம் உள்ள பந்துவீச்சு தாக்குதல் மற்றும் அனுபவத்தால் அந்த துறை குறித்து நான் கவலைப்பட வேண்டியது இல்லை. எல்லோரும் மிகவும் தெளிவாக இருக்கிறோம், நாங்கள் மீண்டும் எளிய கிரிக்கெட்டுக்குச் செல்கிறோம், அது எங்களுக்கு வேலை செய்கிறது, அது தொடரும் என்று நம்புகிறோம். நாங்கள் பணிவாகவும், மிகவும் ஒழுக்கமாகவும், கவனம் செலுத்தவும் விரும்புகிறோம். இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 6-ம் தேதி குஜராத் டைட்டன்ஸுடன் வான்கடே மைதானத்தில் மோதுகிறது. அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (4-ம் தேதி) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
‘நடுவரிசை பேட்டிங் மோசம்’: மும்பை அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறும்போது, “மும்பை அணி பேட்டிங் செய்த விதம் பாராட்டுக்குரியது. அவர்கள், கைசவம் விக்கெட்களை அதிகம் வைத்திருந்தனர். இந்த ஆடுகள்ததில் 190 முதல் 200 ரன்கள் இலக்கு என்றால் சிறப்பானதாக இருந்திருக்கும். பேட்டிங்கில் எங்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. ஆனால் நான், துருவ் ஜூரெல் உள்ளிட்ட மிடில் ஆர்டர்தான் முன்னேற வேண்டும். நாங்கள் பல விஷயங்களை சரியாகவும், தவறாகவும் செய்துள்ளோம். சிறுசிறு தவறுகளை அதிகம் செய்துள்ளோம். அவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறோம்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT