Published : 01 May 2025 05:44 AM
Last Updated : 01 May 2025 05:44 AM
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. அங்ரிஷ் ரகுவன்ஷி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரேன் 27, ரஹ்மனுல்லா குர்பாஸ் 26, அஜிங்க்ய ரஹானே 26, ஆந்த்ரே ரஸ்ஸல் 17 ரன்கள் சேர்த்தனர்.
205 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக டு பிளெஸ்ஸிஸ் 45 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்களும். கேப்டன் அக்சர் படேல் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், விப்ராஜ் நிகாம் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் விளாசினர். அபிஷேக் போரெல் 4, கருண் நாயர் 15, கே.எல்.ராகுல் 7, அஷுதோஷ் சர்மா 7, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 ரன்களில் நடையை கட்டினர்.
கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன் 4 ஓவர்களை வீசி 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களை வீசி 29 ரன்களை வழங்கி விக்கெட்கள் கைப்பற்றினார். அனுல் ராய், வைபவ் அரோரா, ஆந்த்ர ரஸ்ஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். டெல்லி அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது. அந்த நேரத்தில் 14வது ஓவரை வீசிய சுனில் நரேன் தனது சுழலால் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த அக்சர் படேலை ஆட்டமிழக்கச் செய்தார்.
இதே ஓவரின் கடைசி பந்தில் அபாயகரமான பேட்ஸ்மேனான டிரிஸ்டன் ஸ்டப்ஸை போல்டாக்கி வெளியேற்றினார். தொடர்ந்து தனது அடுத்த ஓவரில் களத்தில் நிலைப்பெற்றிருந்த டு பிளெஸ்ஸிஸையும் பெவிலியனுக்கு திருப்பினார். சுனில் நரேன் கைப்பற்றிய இந்த 3 விக்கெட்களும் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முன்னதாக கே.எல்.ராகுலையும் தனது துல்லியமான த்ரோவால் ரன் அவுட் செய்திருந்தார் சுனில் நரேன்.
கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் தொடர்கிறது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஆட்ட நாயகனாக சுனில் நரேன் தேர்வானார்.
போட்டி முடிவடைந்ததும் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறும்போது, “13-வது ஓவருக்கு பிறகு இரண்டு ஓவர்களில் சுனில் நரேன் கைப்பற்றிய சில விக்கெட்கள்தான் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தது. இந்த ஆடுகளத்தில் 204 ரன்கள் என்பது சிறந்த ஸ்கோர்தான். ஆனால் வெளிப்படையாக கூறவேண்டுமெனில் நாங்கள் 15 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். பந்து வீச்சில் ஆந்த்ரே ரஸ்ஸல், அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்த ஆட்டத்தில் கிடைத்த நம்பிக்கை மூலம் முன்னேறிச் செல்ல வேண்டும். சுனில் நரேன் கொல்கத்தா அணிக்காக சாம்பியன் பந்துவீச்சாளராக இருந்துள்ளார், அவர் பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவருடன் வருண் சக்ரவர்த்தியும் இருப்பது மிகவும் நல்லது. அணி சிக்கலில் இருக்கும்போதெல்லாம் நான் சுனில் நரேனிடம் செல்வேன்.
பயிற்சி செஷனுக்கு முன்கூட்டியே வரும் சுனில் நரேன், வலைப்பயிற்சியில் மணிக்கணக்கில் பந்து வீசுவார். அதன் பின்னர் பேட்டிங்கிலும் கவனம் செலுத்துவார். ஆந்த்ரே ரஸ்ஸலும் பந்துவீச்சிலும் கடுமையாக உழைக்கிறார். வலைப்பயிற்சியில் சிறந்த யார்க்கர்களை வீசி வருகிறார். ஒரு அணியாக, நாங்கள் அவரை ஆதரிக்கிறோம். இந்த சீசனில் அவர் பந்து வீசும் போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT