Published : 30 Apr 2025 06:08 AM
Last Updated : 30 Apr 2025 06:08 AM
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 210 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 25 பந்துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்தார். போட்டி முடிவடைந்ததும் அவர் கூறியதாவது: முதல் பந்தில் சிக்ஸர் விளாசுவது என்பது எனக்கு சாதாரண விஷயம். நான் இந்தியாவுக்காக 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ளேன், மேலும் உள்ளூர் அளவிலும் விளையாடியுள்ளேன், அங்கு நான் முதல் பந்தில் சிக்ஸர்களை அடித்துள்ளேன். முதல் 10 பந்துகளை விளையாடும் போது நான் அழுத்தத்துக்கு உள்ளானது இல்லை. என்னை நோக்கி வரும் பந்துகளை அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் தெளிவாக இருப்பேன். நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை, பந்தைப் பார்த்து விளையாடுகிறேன். ஐபிஎல்லில் எனது முதல் சதம், அதுவும் 3-வது இன்னிங்ஸில் வந்துள்ளது. இது சிறப்பான உணர்வை கொடுக்கிறது.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பேட்டிங் செய்வதை நான் ரசிக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது. கடினமாக உழைப்பவர்கள் ஒருபோதும் தோல்வியடையாமல் இருப்பதை கடவுள் உறுதி செய்கிறார். தற்போது களத்தில் பார்க்கும் செயல் திறன்களுக்கும், நான் அடையும் வெற்றிக்கும் எனது பெற்றோர் தான் காரணம். இந்த தருணத்திற்காக நீண்ட காலமாக தயாராகி வந்தேன், நான் விரும்பிய வழியில் அது நிகழ்ந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ராஜஸ்தான் அணிக்கான வீரர்கள் தேர்வு சோதனையில், நான் நன்றாக பேட்டிங் செய்தேன். அப்போது பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், அணி மேலாளர் ரோமி பிந்தர் ஆகியோர் ஏலத்தின் போது அணியில் எடுக்க முயற்சிப்போம் என்று கூறினர்.
அவர்கள் என்னை தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிடம் அறிமுகப்படுத்தினர். அவரிடம் பயிற்சி பெற வேண்டும் என்ற என்னுடைய கனவு நிறைவேறியது. உதவி பயிற்சியாளர்களும் மூத்த வீரர்களும் எனக்குஆதரவு கொடுத்தனர். என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் தருகிறார்கள்.
அணிக்காக என்னால் ஆட்டத்தை வென்று கொடுக்க முடியும் என்று அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற அழுத்தம் இல்லை. நான் இந்திய அணிக்காக பங்களிக்க விரும்புகிறேன், அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். அந்த நிலையை அடையும் வரை என்னால் கடினமாக உழைப்பதை நிறுத்த முடியாது. நாட்டுக்காக சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். இவ்வாறு வைபவ் சூர்யவன்ஷி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT