Published : 29 Apr 2025 06:32 AM
Last Updated : 29 Apr 2025 06:32 AM
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் சேர்த்தனர். அபிஷேக் போரெல் 28, டு பிளெஸ்ஸிஸ் 22 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிருணல் பாண்டியா 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டும் வழங்கி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிருணல் பாண்டியா 47 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், விராட் கோலி 47 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 84 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்தது.
கிருண் பாண்டியா களமிறங்கும் போது பெங்களூரு அணி 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்திருந்தது. அந்த சூழ்நிலையில் விராட் கோலியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்ததுடன் கடைசி வரை களத்தில் இருந்து நின்று அணியை வெற்றி பெற செய்ததில் கிருணல் பாண்டியா முக்கிய பங்கு வகித்தார்.
ஆர்சிபி அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற கிருணல் பாண்டியா கூறியதாவது:
எனது செயல் திறன் மிகவும் திருப்தி அளிக்கிறது. எனது பங்கு தெளிவாக இருந்தது. நாங்கள் ஆரம்பத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்தால், நான் உள்ளே சென்று ஒரு பார்ட்னர்ஷிப்பை கட்டமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது.
டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, ரொமேரியா ஷெப்பர்ட் போன்ற சிறந்த பவர்ஹிட்டர்கள் எங்களிடம் உள்ளனர். இதனால் பந்து வீச்சை நொறுக்க முடியும். எனது பங்கை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். விராட் கோலி மறுமுனையில் இருந்ததால் மிகவும் எளிதாக இருந்தது. முதல் 20 பந்துகள் அசவுகரியமாக இருந்தது.
ஆனால் அவர், எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார். இதனால் எனது ஆட்டத்தை திரும்பப் பெற்றேன். அந்த வகையில் விராட் கோலியை பாராட்ட வேண்டும். பந்துவீச்சை பொறுத்தவரையில் நான் எப்போதும் சிக்கனமாக வீசக்கூடியவன்தான். ஒரு பந்துவீச்சாளராக, நான் எப்போதும் ஒரு படி மேலே இருக்க விரும்புகிறேன். எனது பந்துவீச்சு வேகத்தின் மாறுபாடுகளை பார்த்தால் அது தெரியும். பேட்ஸ்மேன்களின் பலத்தை அறிந்து, அதை எனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறேன்.
காலப்போக்கில், பேட்ஸ்மேன்களின் திறனும், டெக்னிக்கும் மேம்பட்டு வருகிறது. இதனால் ஒரு பந்துவீச்சாளராக ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். எனது ஆயுதக் களஞ்சியத்தில் என்ன இருக்கிறது என்பதை பேட்ஸ்மேன்கள் யூகித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு கிருணல் பாண்டியா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT