Published : 26 Apr 2025 06:11 AM
Last Updated : 26 Apr 2025 06:11 AM
புதுடெல்லி: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்கம் வென்ற நட்சத்திர வீரரான இந்தியாவின் நீரஜ் சோப்ரா வரும் மே 24-ம் தேதி பெங்களூருவில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்க பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நீரஜ் சோப்ராவின் அழைப்பை அர்ஷத் நதீம் நிராகரித்தார். மே 22-ம் தேதி தென் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்று அர்ஷத் நதீம் விளக்கமளித்திருந்தார்.
இதற்கிடையே கடந்த செவ்வாய்கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாதலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் பாகிஸ்தான் வீரருக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்ததை சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு நீரஜ் சோப்ரா எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கிளாசிக் போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமுக்கு நான் அழைப்பு விடுத்தது குறித்து அதிகம் பேசப்படுகிறது, அதில் பெரும்பாலானவை வெறுப்பு மற்றும் துஷ்பிரயோகமாக உள்ளது. என் குடும்பத்தைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.
அர்ஷத்துக்கு நான் விடுத்த அழைப்பு ஒரு தடகள வீரரிடமிருந்து மற்றொரு விளையாட்டு வீரருக்கு சென்றது. இதில் அதிகமாகவோ, குறைவாகவோ எதுவும் இல்லை. நீரஜ் சோப்ரா கிளாசிக்கின் நோக்கம் சிறந்த விளையாட்டு வீரர்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதும், நம் நாடு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளின் தாயகமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு போட்டிகளில் பங்கேற்க வருமாறு அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடந்த 48 மணி நேரத்தில் நடந்த எல்லாவற்றிற்கும் பிறகு, என்.சி கிளாசிக்கில் அர்ஷத் பங்கேற்பது முற்றிலும் கேள்விக்குறியாக இருந்தது. எனது நாடும் அதன் நலன்களும் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
தீவிரவாத தாக்குதலில் தங்களது உறவினர்களை இழந்து தவிப்பவர்களுடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. நடந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தேசத்துடனும் சேர்த்து நானும் காயமும் கோபமும் அடைகிறேன். நம் நாட்டின் பதில், ஒரு தேசமாக நமது வலிமையைக் காண்பிக்கும் மற்றும் நீதி வழங்கப்படும் என்று நம்புகிறேன்.
பல ஆண்டுகளாக எனது நாட்டை பெருமையுடன் சுமந்து வருகிறேன், எனவே எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல் என்னையும் என் குடும்பத்தையும் குறிவைக்கும் மக்களிடம் நான் விளக்க வேண்டியிருப்பது எனக்கு வேதனையளிக்கிறது. நாங்கள் எளிய மக்கள், தயவுசெய்து எங்களை வேறு எதுவாகவும் காட்ட வேண்டாம். ஊடகங்களின் சில பிரிவுகள் என்னைச் சுற்றி பல தவறான கதைகளை உருவாக்கியுள்ளன, ஆனால் நான் பேசவில்லை என்பதால், அது உண்மையாகிவிடாது. மக்கள் எவ்வாறு கருத்துக்களை மாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் எனக்கு கடினமாக உள்ளது. இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT