Published : 24 Apr 2025 05:15 AM
Last Updated : 24 Apr 2025 05:15 AM
கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் முக்கியமானது 3 துறைகள். பேட் டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலுமே சிறந்து விளங்கக் கூடிய அணிகள் தான் எப்போதும் வெற்றிக் கனியைச் சுவைக்கின்றன.
ஆனால், சில போட்டிகளில் மோசமான ஃபீல்டிங் காரணமாக மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களைப் பெற்றுள்ள சிறந்த அணிகள் கூட தோல்வியைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக எதிரணிகளைச் சேர்ந்த முக்கிய வீரர்களின் கேட்ச்களை கோட்டை விடுவது அந்தப் போட்டியின் முடிவையே மாற்றி அமைக்கக்கூடும்.
அவ்வாறு கேட்ச்களை கோட்டை விடுவதால் சுதாரித்துக் கொண்டு விளையாடும் பேட்ஸ்மேன்கள் அரை சதம், சதம் என விளாசி போட்டியை தங்கள் வசம் எடுத்துச் சென்றுவிடுவர். அந்த அளவுக்கு கேட்ச்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
கிரிக்கெட் புத்தகத்தில் கேட்ச்களால் போட்டியை வெல்ல முடியும் (கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ்) என்ற சொலவடை உண்டு. அதனால்தான் பயிற்சியின் போது தனியாக வீரர்களுக்கு கேட்ச் செய்வதற்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆனால், நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 111 கேட்ச்கள் கோட்டை விடப்பட்டுள்ளன. மிகச்சிறந்த பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என களைகட்டும் ஐபிஎல் போட்டிகளில் இந்த அளவுக்கு கேட்ச்கள் கோட்டை விடப்படுவது இதுவே முதல்முறையாகும்.
நடப்பு ஐபிஎல் சீசனில் தற்போது 40 போட்டிகள் (லக்னோ-டெல்லி போட்டி வரை) நடந்து முடிந்துள்ளன. இந்த 40 போட்டிகளில் மட்டுமே 111 முறை கேட்ச்களை ஃபீல்டர்கள் கோட்டை விட்டுள்ளனர்.
2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி முதல் தற்போது வரை இது ஒரு மோசமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டில் 95 கேட்ச்களும், 2021-ம் ஆண்டில் 93 கேட்ச்களும், 2022-ம் ஆண்டில் 104 கேட்ச்களும், 2023-ம் ஆண்டில் 78 கேட்ச்களும், 2024-ம் ஆண்டில் 110 கேட்ச்களும் ஃபீல்டர்களால் கோட்டை விடப்பட்டுள்ளன.
தற்போதைய 2025-ம் ஆண்டு சீசனில் இதுவரை, 111 கேட்ச்களை ஃபீல்டர்கள் தவறவிட்டுள்ளனர். ஒட்டுமொத்த அணிகளின் கேட்ச் பிடிக்கும் திறன் 75.2 சதவீதமாக உள்ளது. நடப்பு சீசனில்தான் அதிக அளவாக கேட்ச்கள் கோட்டை விடப்பட்டுள்ளன. இந்த சீசனில் இன்னும் 34 போட்டிகள் எஞ்சியிருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதனால் தவறவிடப்படும் கேட்ச்களின் எண்ணிக்கை கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
நடப்பு சீசனில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) உள்ளது. அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 16 கேட்ச்களை தவறவிட்டுள்ளது. 27 கேட்ச்களை மட்டுமே அந்த அணி வீரர்கள் பிடித்துள்ளனர்.
அதேநேரத்தில் குறைந்த அளவு கேட்ச்களை கோட்டை விட்ட அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. அந்த அணி 8 ஆட்டங்களில் பங்கேற்று வெறும் 8 கேட்ச்களை மட்டுமே தவறவிட்டுள்ளது. மாறாக 41 கேட்ச்களை அந்த அணி வீரர்கள் தவறாமல் பிடித்துள்ளனர். இதன்மூலம் மும்பை அணியின் கேட்ச் பிடிக்கும் திறன் 83.6 சதவீதமாக உள்ளது. அதனால்தான் அந்த அணி முதலிடத்தில் உள்ளது.
பெங்களூரு அணி 7 கேட்ச்களையும், கொல்கத்தா அணி 7 கேட்ச்களையும் தவறவிட்டுள்ளன. ஆனால் இந்த 2 அணிகளும் குறைவான கேட்ச்களை தவறவிட்டிருந்தாலும், கேட்ச் பிடிக்கும் திறன் சதவீதம் மும்பை அணியை விடக் குறைவாக உள்ளது. அதனால்தான் பட்டியலில் பின்தங்கியுள்ளன.
அதேபோல், குஜராத் அணி 11 கேட்ச்களையும், ஹைதராபாத் அணி 9 கேட்ச்களையும், ராஜஸ்தான் அணி 11 கேட்ச்களையும், லக்னோ அணி 14 கேட்ச்களையும், பஞ்சாப் அணி 13 கேட்ச்களையும், டெல்லி அணி 15 கேட்ச்களையும் தவறவிட்டுள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்களை விளாசினார். அந்த இன்னிங்ஸின்போது அவர் கொடுத்த கேட்ச்களை பஞ்சாப் அணியினர் 2 முறை தவறவிட்டனர். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர் அபாரமாக விளையாடி சதமடித்து விட்டார்.
சிஎஸ்கே அணிக்கு எதிராக பெங்களூரு அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியபோது, பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கொடுத்த 3 வாய்ப்புகளை சிஎஸ்கே வீரர்கள் வீணாக்கினர். இதைப் பயன்படுத்திய அவர் 32 பந்துகளில் 51 ரன்கள் குவித்துவிட்டார்.
மேலும், சிஎஸ்கேவின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னையில் 17 ஆண்டுகளாக வெற்றி பெறாமல் இருந்த பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுவிட்டது. இதற்கு மோசமான ஃபீல்டிங்கும், கேட்ச்களை தவறவிட்டதும்தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மைதானத்தில் எழும்பும் பந்துகளை கேட்ச் செய்வதை வீரர்கள் தவறவிடக்கூடாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர். கேட்ச்களை தவறாமல் பிடிப்பது வெற்றிக்கனியைப் பறிப்பது போன்றது என்பதே நிதர்சனம்.
இனி வரும் போட்டிகளிலாவது ஐபிஎல் அணி வீரர்கள் தங்களுக்கு வரும் கேட்ச்களை தவறாமல் பிடிப்பார்கள் என்று நம்புவோமாக..!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT