Published : 24 Apr 2025 04:43 AM
Last Updated : 24 Apr 2025 04:43 AM
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), ராஜஸ்தான் ராயல்ஸ்(ஆர்ஆர்) அணிகள் மோதவுள்ளன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசனில் இதுவரை சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட பெங்களூரு அணி வெற்றி பெறவில்லை. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை பெங்களூரு அணி தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற 3 ஆட்டங்களில் குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம் அந்த அணி தோல்வி கண்டுள்ளது. ஆனால் வெளிமைதானங்களில் நடைபெற்ற 5 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.
எனவே, இன்றைய ஆட்டத்தில் உள்ளூர் மைதானத்தில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்குவதில் பெங்களூரு அணி வீரர்கள் முழுமையாக முயற்சி செய்யக்கூடும்.
இன்றைய ஆட்டத்தில் பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட் ஆகியோரிடமிருந்து அதிகபட்ச செயல்திறன் வெளிப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், பவுலிங்கில் அந்த அணி புவனேஸ்வர் குமார், யஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், கிருணல் பாண்டியா, சுயாஷ் சர்மா ஆகியோருடன் பலம் மிகுந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 6-ல் தோல்வியுடன் 4 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை சிஎஸ்கே, பஞ்சாப் அணிகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது. கடைசியாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில், அந்த அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்தத் தோல்விக்கு பழிக்கு பழி வாங்கும் முனைப்புடன் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் விளையாடக்கூடும்.
அந்த அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரெல், சிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அந்த அணிக்கு வெற்றி கைகூடும். அணியில் புதிதாக இணைந்துள்ள 14 வயதேயான வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. லக்னோ அணிக்கு எதிராக கடந்த ஆட்டத்தில்தான் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே அவர் 20 பந்துகளில் 34 ரன்கள் விளாசி அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். தொடக்க வீரராக களம் காணும் அவரிடமிருந்து அதிகபட்ச செயல்திறன் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அதேபோல், பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, தீக்சனா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT