Published : 23 Apr 2025 07:50 AM
Last Updated : 23 Apr 2025 07:50 AM
கொல்கத்தா: குஜராத் டைடன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் தோல்வி கண்டோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது.
முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. சாய் சுதர்ஷன் 52 ரன்களும், ஜாஸ் பட்லர் 41 ரன்களும், ஷாருக் கான் 11 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 55 பந்துகளில் 90 ரன்கள் (10 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசினார். வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 199 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. சுனில் நரேன் 17, கேப்டன் ரஹானே 50, வெங்கடேஷ் ஐயர் 14, ரிங்கு சிங் 17, ஆந்த்ரே ரஸ்ஸல் 21, அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 ரன்கள் எடுத்தனர்.
குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர். குஜராத் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் பின்தங்கியுள்ளது.
இந்தத் தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ரஹானே கூறியதாவது: இந்த மைதானத்தில் 199 ரன்கள் என்ற இலக்கு சேசிங் செய்யக்கூடிய இலக்கு என்று நான் நினைத்தேன். நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் பேட்டிங்கில் எதிர்பார்த்த ரன்கள் வரவில்லை. இந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் தோல்வி கண்டோம்.
எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான அதிரடியை இந்த சீசனில் இதுவரை வழங்கவில்லை. தொடக்க ஜோடியை மாற்றியும் பார்த்தோம். ஆனால், அவர்கள் இத்தொடர் முழுவதுமே தடுமாற்றமாக விளையாடி வருகின்றனர். இதிலிருந்து நாங்கள் வேகமாக கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும். நாங்கள் நடு ஓவர்களில் அதாவது 7-வது ஓவர் முதல் 15-வது ஓவர் வரை
நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் மீது எந்த புகாரும் இல்லை. வரும் ஆட்டங்களில் தொடக்க வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் முன்னேறுவதற்கு விஷயங்கள் இருக்கின்றன. ஃபீல்டிங் துறையில் 15 முதல் 20 ரன்களை கட்டுப்படுத்தியிருந்தால், அது வெற்றியில் பெரும் பங்காற்றி இருக்கும் என்று நினைக்கிறேன். களத்தில் எங்களுடைய வீரர்கள் கடினமாக உழைக்கின்றனர்.
டி20 கிரிக்கெட்டில் நீங்கள் கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நேர்மறையான மனதுடன் தைரியமான வீரராக செயல்பட வேண்டும்.
எங்களின் தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். ஆனால், வரும் ஆட்டங்களில் அவர்கள் தைரியமாக விளையாட வேண்டும். இவ்வாறு ரஹானே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT