Published : 22 Apr 2025 09:23 PM
Last Updated : 22 Apr 2025 09:23 PM
லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் பந்து வீச்சாளர் முகேஷ் குமார், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
லக்னோவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி லக்னோ அணிக்காக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்ரம் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். அதன் பின்னர் லக்னோ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. நிக்கோலஸ் பூரன் 9, அப்துல் சமத் 2, ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்த லக்னோ அணியால் அதன் பின்னர் சீரான முறையில் ரன் சேர்க்க முடியவில்லை. மார்ஷ், 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பேட் செய்ய வரவில்லை.
பூரன் ஆட்டமிழந்ததும் சமத், டேவிட் மில்லர் ஆயுஷ் பதோனி ஆகியோர் அவருக்கு முன்னதாக தான் பேட் செய்ய வந்தனர். பதோனி 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் கடைசி இரண்டு பந்துகள் எஞ்சியிருக்க பேட் செய்ய வந்தார் லக்னோ கேப்டன் ரிஷப் பந்த்.
20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து லக்னோ. மில்லர், 15 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். பந்த், 2 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4, சமீரா மற்றும் ஸ்டார்க் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற டெல்லி அணிக்கு 160 ரன்கள் தேவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT