Published : 21 Apr 2025 12:27 PM
Last Updated : 21 Apr 2025 12:27 PM

சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? - என்ன சொல்கிறார் தோனி

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் சுற்றில் அந்த அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்த சூழலில் அடுத்த சுற்றான பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெறுமா? கேப்டன் தோனி என்ன சொல்கிறார்? உள்ளிட்டவற்றை பார்ப்போம்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டு அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2008 சீசன் முதல் 2024 சீசன் வரையில் மூன்று முறை, அதவாது 2020, 2022, 2024-ஆம் ஆண்டு சீசன்களில் மட்டுமே முதல் சுற்றான லீக் சுற்றோடு சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறி உள்ளது. 2016 மற்றும் 2017 சீசன்களில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் சிஎஸ்கே விளையாடவில்லை. மற்ற அனைத்து சீசன்களிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 10 இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டமும், 5 முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. 2009 சீசனில் அரை இறுதி மற்றும் 2014 சீசனில் பிளே-ஆஃப் சீசனில் விளையாடி உள்ளது.

2025 சீசன்: நடப்பு சீசனின் ஆரம்பம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உள்ளூர், வெளியூர் என எங்கு சென்றாலும் சிஎஸ்கே வீரர்கள் சோப்பிக்கத் தவறுகிறார்கள். நடப்பு சீசனில் 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளை சிஎஸ்கே பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் படுமோசமாக உள்ளது. இந்த சீசனில் இதுவரை சுமார் 19 கேட்ச்களை நழுவ விட்டுள்ளது சிஎஸ்கே. விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் கேட்ச்களை பிடிக்க தவறி உள்ளது. கேட்ச் மிஸ் செய்யாத போட்டியே இல்லை.

அதே போல பேட்டிங்கில் இலக்கை விரட்டுவது மற்றும் இலக்கை நிர்ணயிப்பது என இரண்டிலும் சொதப்பி வருகிறது. பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது ஆகியோர் ஆறுதல் தருகின்றனர்.

சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? - நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே முன்னேற வேண்டுமென்றால் எஞ்சியுள்ள ஆறு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் 16 புள்ளிகளை சிஎஸ்கே பெறலாம். இதில் நெட் ரன் ரேட்டும் முக்கியம்.

தோனி என்ன சொல்கிறார்: வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் உடனான தோல்விக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி, “இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சக்ஸஸ் பெற்ற அணியாக இருக்க காரணம் சிறந்த கிரிக்கெட் விளையாடியது தான் என எண்ணுகிறேன். கடந்த 2020 சீசன் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. நாங்கள் சிறப்பான முறையில் கிரிக்கெட் ஆட வேண்டிய அவசியம் உள்ளது. எங்கள் அணியில் உள்ள ஓட்டைகளை அடைத்து எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு ஆட்டமாக அணுகுவோம். இதில் நாங்கள் தோல்வி கண்டால் அடுத்த சீசனுக்கான அணி சேர்க்கையை கண்டறியும் பணியை மேற்கொள்வோம். அதற்காக ஆடும் லெவனில் அதிக வீரர்களை மாற்ற முடியாது. அடுத்த சீசனுக்கு ஆடும் லெவனை செக்யூர் செய்ய வேண்டும். அதன் மூலம் வலுவான கம்பேக் கொடுக்க முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x