Published : 20 Apr 2025 09:20 AM
Last Updated : 20 Apr 2025 09:20 AM
முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் நடப்பு சீசனில் 2-வது முறையாக மோதுகின்றன. அதிலும் ஒருநாள் இடைவெளியில் விளையாடுகின்றன. நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் மோதியிருந்தன. மழை காரணமாக 14 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ்.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணியை தனது அற்புதமான பந்து வீச்சால் 95 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது பஞ்சாப் அணி. டிம் டேவிட் 26 பந்துகளில், 50 ரன்கள் விளாசியதன் காரணமாகவே ஆர்சிபி அணியால் சற்று கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்திருந்தது. ஆடுகளத்துக்கு தகுந்தவாறு தகவமைத்துக் கொண்டு விளையாடாததால் ஆர்சிபி அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை தாரைவார்த்தது.
பில் சால்ட் (4), விராட் கோலி (1), லியாம் லிவிங்ஸ்டன் (4), ஜிதேஷ் சர்மா (2), கிருணல் பாண்டியா (1), மனோஜ் பன்டேஜ் (1), யாஷ் தயாள் (0), புவனேஷ்வர் குமார் (8) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய கேப்டன் ரஜத் பட்டிதார் 23 ரன்கள் சேர்த்தார். ஆர்சிபி எடுத்த 95 ரன்களில் டிம் டேவிட், ரஜத் பட்டிதார் ஆகியோர் கூட்டாக சேர்த்தது 73 ரன்களாக அமைந்திருந்தது.
ஆர்சிபி அணியை கட்டுப்படுத்தியதில் மார்கோ யான்சன், யுவேந்திர சாஹல் ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர். யான்சன் 3 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். அதேவேளையில் யுவேந்திர சாஹல் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
96 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் 12.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 98 ரன்கள் எடுத்து வெற்றிக் கோட்டை கடந்தது. நடப்பு சீசனில் சொந்த மண்ணில் ஆர்சிபி அணியின் ஹாட்ரிக் தோல்வியாக இது அமைந்தது. அந்த அணி இங்கு விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தவில்லை.
பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் பிரியன்ஷ் ஆர்யா 16, பிரப்சிம்ரன் சிங் 13, ஸ்ரேயஸ் ஐயர் 7, ஜோஷ் இங்லிஷ் 14 ரன்களில் நடையை கட்டினர். 55 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் இடது கை பேட்ஸ்மேனான நேஹல் வதேரா 19 பந்துகளில், 33 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக் பாதைக்கு அழைத்து சென்றார். நெருக்கடியான நேரத்தில் சுயாஷ் சர்மா பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியிருந்தார் நேஹல் வதேரா.
பஞ்சாப் அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 7 ஆட்டங்களில் 3-வது தோல்வியை சந்தித்த ஆர்சிபி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மீண்டும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற்று பதிலடி கொடுப்பது சாத்தியப்படும்.
அதேவேளையில் அர்ஷ்தீப் சிங், சேவியர் பார்ட்லெட், மார்கோ யான்சன், யுவேந்திர சாஹல் ஆகியோரை உள்ளடக்கிய பஞ்சாப் அணியின் பந்து வீச்சு துறை மீண்டும் ஒமுறை ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்க ஆயத்தமாக இருக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT