Published : 19 Apr 2025 07:28 PM
Last Updated : 19 Apr 2025 07:28 PM
ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் இளம் வயது வீரராக அறியப்படுகிறார் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உடனான இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக அவர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த், முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்த நிலையில் டாஸின் போது தங்கள் அணியில் இளவயது வீரர் வைபவ் விளையாடுவதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாற்று கேப்டன் ரியான் பராக் உறுதி செய்தார். இப்போது அந்த அணியின் இம்பேக் பிளேயர் பட்டியலில் வைபவ் இடம்பெற்றுள்ளார். அந்த அணி பேட் செய்யும் போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி? - 14 வயதான சூர்யவன்ஷி பிஹாரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். வெறும் 12 வயது 284 நாட்களில், 2023-24-ல் நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் மிகச்சிறிய வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக யுவராஜ் சிங் தனது 15 வயது 57 நாட்களிலும், சச்சின் 15 வயது 230 நாட்களிலும் அறிமுகமாகியிருந்தனர். தற்போது இவர்களை விட மிக குறைந்த வயதில் அறிமுகமாகி சாதித்துள்ளார் சூர்யவன்ஷி.
சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் தொடரில் அவர் 62 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து மிரட்டினார். 13 வயது 188 நாட்களேயான அவர் சதமடித்து கவனம் ஈர்த்தார். கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்தவர் என்ற பெருமையை பெற்றார். 58 பந்துகளில் சதமடித்தார். இளம் வயதில் அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிக சிறிய வயதில் அறிமுகமாகி அனைவரின் பார்வையையும் தன் மீது குவித்துள்ளார் இந்த இளம் வயது சாதனையாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT