Published : 17 Apr 2025 04:16 PM
Last Updated : 17 Apr 2025 04:16 PM

இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்?

ஐபிஎல் முடிந்த கையோடு இங்கிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. ஆஸ்திரேலியாவில் பட்ட உதைகளைக் கணக்கில் கொண்டு சில பல மாற்றங்களைச் செய்து வருகிறது. முதற்படியாக உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் கோச் திலிப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ஸ்ட்ரெந்த் அண்ட் கண்டிஷனிங் கோச் சோஹாம் தேசாயும் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்.

கவுதம் கம்பீருடன் அபிஷேக் நாயர் இணைந்தார். ஆனால் ராகுல் திராவிட் காலத்திலிருந்தே திலிப் இருந்தார். சோஹாம் தேசாய்க்கு பதிலாக பழைய ஃபிட்னெஸ் கோச் அட்ரியன் லீ ரோவ் அழைக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் தோல்வி கண்ட பிறகே சிதான்ஷு கோடக் என்பவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளனர். இதில் அபிஷேக் நாயர் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு விசித்திரமாகவும் உள்ளதாக ஊடகங்கள் பல தெரிவிக்கின்றன.

காரணம், அபிஷேக் நாயர் அற்புதமான பயிற்சியாளர் என்று வீரர்களே சான்றிதழ் வழங்கியுள்ளனர், அவரை ஏன் திடீர் நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்கு வழக்கம் போல் இப்போதைய அணி ஆட்சி நிர்வாகத்திடம் பதில் இல்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அபிஷேக் நாயர் இருக்கையில் இளம் திறமைகளை வளர்த்தெடுத்தார். இது அதிகம் வெளியில் தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில், அபிஷேக் நாயரின் ஒப்பந்தம் ஆகஸ்ட் வரையில் இருக்கும்போது அவரைப்போய் ஏன் நீக்கினார்கள் என்பது கம்பீருக்கே வெளிச்சம்.

அதேபோல் இங்கிலாந்துக்கான அணியில் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்பட மாட்டார் என்றும் சில ஊடகங்கள் பிசிசிஐ அணித் தேர்வு உள்வட்டத்தைச் சுட்டிக்காட்டி கலாய்த்து எழுதி வருகின்றன. ஆனால், அது முழுக்கவும் கலாய்ப்பு என்றும் கூறுவதற்கில்லை.

எல்லோரும் இப்போது கருண் நாயரின் எழுச்சியைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதனால், கருண் நாயருக்காக பேசுவோரின் வாயை அடைக்க அவரை இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்து, சர்பராஸ் கான் சுத்தமாக ஒழிக்கப்படலாம் என்றே கூறி வருகின்றனர். இதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

கம்பீர் - ரோஹித் சர்மா கூட்டணியின் கீழ் அணித் தேர்வு உள்ளிட்ட எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது என்பதும் சில ஊடக கலாய்ப்புகளை உண்மையாக்கவும் செய்துள்ளன. ஆனால், ஆஸ்திரேலியாவில் சொதப்பலோ சொதப்பிய ரோஹித் சர்மா கேப்டனாக நீடிப்பார், எதிர்பார்த்து நம்ப வைத்து சொதப்பிய விராட் கோலி போன்றோர் தங்களைத் தாங்களே நீக்கிக் கொண்டால்தான் உண்டு. இத்தகைய நிலையில் எந்த ஒரு கலாய்ப்பும் உண்மையாகவே வாய்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x