Published : 07 Mar 2025 08:11 AM
Last Updated : 07 Mar 2025 08:11 AM
சென்னை: ரெட் புல் நிறுவனம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் சென்னை தீவு திடல் மைதானத்தில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி மோட்டோ ஜாம் என்ற பெயரில் கார், பைக் சாகச நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இதில் கார் டிரிஃப்ட், பைக் ஸ்டண்ட் மற்றும் ஃப்ரீஸ்டைல் மோட்டோகிராஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் சாகசம் புரிய உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 12-ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி நரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை பார்வையாளர்கள் காண்பதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்கு சுமார் 4 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக ரெட் புல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பினர் சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
லெபனான் ரேலி சாம்பியனும், டிரிஃப்ட் கின்னஸ் உலக சாதனையாளருமான அப்தோ ஃபெகாலி, லிதுவேனியா ஸ்டண்ட் பைக்கர் அராஸ் கிபீசா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்க உள்ளனர். கடந்த வருடம் சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெற்ற நிலையில் தற்போது நடைபெற உள்ள கார், பைக் ஸ்டண்ட் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT