Published : 19 Feb 2025 10:39 PM
Last Updated : 19 Feb 2025 10:39 PM

60 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸி. @ சாம்பியன்ஸ் டிராபி

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் சேர்த்தது.

தொடக்க ஆட்டக்காரர் வில் யங் மற்றும் டாம் லேதம் இணைந்து 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மிடில் ஓவர்களை இந்த கூட்டணி திறம்பட விளையாடியது. வில் யங், 113 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாம் லேதம் சதம் கடந்தார். 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த பிலிப்ஸ், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. இறுதிவரை களத்தில் இருந்த டாம் லேதம், 104 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களில் 113 ரன்களை எடுத்தது நியூஸிலாந்து என்பது கவனிக்கத்தக்கது.

321 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி இறங்கியது. பாபர் அஸம், சவுத் ஷகீல் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். சவுத் ஷகீல் வெறும் ஆறு ரன்களுடன் நடையை கட்ட, பாபர் அஸம் 33வது ஓவர் வரை அரை சதம் கடந்து 64 ரன்கள் எடுத்திருந்தார். கேப்டன் ரிஸ்வான் 3 ரன்கள், ஃபகர் ஸமான் 24 ரன்கள், தய்யப் தாஹிர் 1, ஷாஹின் அஃப்ரிடி 14, நஸீம் ஷா 13 என அணி தடுமாறியது. இதில் குஷ்தில் ஷா 69 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை ஏற்ற உதவினார். 47 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 260 ரன்களுடன் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கியது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x