Published : 31 Jan 2025 09:00 PM
Last Updated : 31 Jan 2025 09:00 PM
புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 181 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ள நிலையில் 4-வது டி20 போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக இருந்தது. முதல் இன்னிங்ஸின் 2-வது ஓவரை சாகிப் மஹ்மூத் வீசினார். அந்த ஓவரில் சஞ்சு சாம்சன் (1 ரன்), திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவை அவுட் செய்தார். இதில் திலக் வர்மாவும்,சூர்யகுமார் யாதவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.
பின்னர் வந்த ரிங்கு சிங், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அபிஷேக் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங், 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிவம் துபேவும், ஹர்திக் பாண்டியாவும் ரன் குவிப்பில் ஆர்வம் காட்டினர். 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஹர்திக் பாண்டியா. 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் துபே. அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.
20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 182 ரன்கள் என்ற இலக்கை தற்போது விரட்டுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வெல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT