Published : 29 Jan 2025 08:57 AM
Last Updated : 29 Jan 2025 08:57 AM

யு-19 டி20 உலகக் கோப்பை: சதம் விளாசி திரிஷா சாதனை

கோலாலம்பூர்: யு-19 டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான திரிஷா கோங்கடி சதம் விளாசினார். இதன் மூலம் அவர், யு-19 டி20 உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

யு-19 டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி, ஸ்காட்லாந்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையான திரிஷா கோங்கடி 59 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் விளாசினார். இதன் அவர், மூலம் யு-19 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய கமலினி 42 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், சனிகா ஷால்கே 29 ரன்களும் சேர்த்தனர். 209 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 14 ஓவர்களில் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பிப்பா கெல்லி 12, எம்மா வால்சிங்கம் 12 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஆயுஷி சுக்லா 4, வைஷ்ணவி சர்மா 3, திரிஷா கோங்கடி 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஏற்கெனவே தனது பிரிவில் அரை இறுதிக்கு முன்னேறிவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x