Published : 24 Jan 2025 09:46 AM
Last Updated : 24 Jan 2025 09:46 AM
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களின் செயல் திறன் மோசமாக இருந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரின் 6-வது சுற்று தொடங்கியது.
இதில் மும்பை - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை பிகேசி மைதானத்தில் நடைபெற்றது. மும்பை அணிக்காக களமிறங்கிய ரோஹித் சர்மா 19 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் எடுத்த நிலையில் வேகப் பந்து வீச்சாளர் உமர் நசீர் பந்தை மிட் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுகிப் நபி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
ரஹானே 12, ஸ்ரேயஸ் ஐயர் 11, ஷிவம் துபே 0, ஷம்ஸ் முலானி 0 ரன்களில் அணி வகுத்தனர். தாக்குப்பிடித்து விளையாடிய ஷர்துல் தாக்குர் 51, தனுஷ் கோட்டியன் 26 ரன்கள் சேர்த்ததால் மும்பை அணி 33.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உமர் நசீர் 4, யுத்விர் சிங் 4, அகிப் நபி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 42 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.
ராஜ்கோட்டில் சவுராஸ்டிரா - டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 10 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்த நிலையில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான தர்மேந்திர சிங் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். ஆல்ரவுண்டரான ஜடேஜா சுழலில் அசத்த டெல்லி அணி 49.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா 5 விக்கெட்களை சாய்த்தார். தொடர்ந்து பேட்டிங்கில் அவர், 38 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பெங்களூருவில் பஞ்சாப் - கர்நாடகா அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய ஷுப்மன் கில் 4 ரன்களில் அபிலாஷ் ஷெட்டி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT