Published : 03 May 2024 08:05 AM
Last Updated : 03 May 2024 08:05 AM

முக்கியமான பந்து வீச்சாளர்கள் இல்லாததால் தோல்வி: சொல்கிறார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை: பனிப்பொழிவு, முக்கியமான பந்து வீச்சார்களான மதிஷா பதிரான, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இல்லாததால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியால் 7 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோரது சுழற்பந்து வீச்சில் தடுமாறினார்கள்.

இவர்கள் இருவரும் கூட்டாக 8 ஓவர்களை வீசி 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி நடு ஓவர்களில் சிஎஸ்கே அணியை முடக்கினர். இந்த ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. ரன் குவிப்பில்சிஸ்கே தேக்கம் அடைந்ததற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ரன் வேட்டையாடும் ஷிவம் துபே சந்தித்த முதல் பந்திலேயே ஹர்பிரீத் பிராரிடம் விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஜடேஜாவும் ஏமாற்றம் அளித்தார்.

இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறக்கப்பட்ட சமீர் ரிஸ்வி தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். 23 பந்துகளை சந்தித்த அவர், வெறும் 21 ரன்களை மட்டுமே எடுத்து அணியின் ரன்குவிப்பை மந்த நிலைக்கு கொண்டு சென்றார்.

இறுதிக்கட்ட ஓவர்களில் ரன் வேட்டையாடும் தோனியால் கூட பெரிய அளவில் மட்டை வீச்சில் ஈடுபட முடியாமல் போனது. 11 பந்துகளை எதிர்கொண்ட அவரால்14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது ஒருபுறம் இருக்க 163 ரன்களையே இலக்காக கொடுத்த சிஎஸ்கே அணிக்கு முதல் ஓவரிலேயே தீபக் ஷாகர் காயம் காரணமாக 2 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார்.

ஏற்கெனவே பதிரனா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் உடல்நிலை பாதிப்பு காரணமாக களமிறங்காத நிலையில் ஷர்துல் தாக்குர், ரிச்சர்ட் கிளீசன் ஆகியோர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி ஆகியோரால் எந்த ஒரு கட்டத்திலும் திருப்பு முனையை ஏற்படுத்த முடியாமல் போனது. ஒட்டுமொத்த பந்து வீச்சும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 13 பந்துகளை மீதம் வைத்து 17.5 ஓவர்களில் 163 ரன்களை எடுத்து வெற்றிகண்டது.

சிஎஸ்கே அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடம் வகிக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:

பதிரனா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இல்லாததுதான் பிரச்சினை. ஆட்டத்தின் போது விக்கெட்வீழ்த்த வேண்டிய பகுதிகள் உள்ளன. எங்களிடம் 2 பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர். பனிப்பொழிவு காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தில் இல்லாதது போன்ற நிலையே இருந்தது. இதனால் எதையுமே செய்ய முடிவில்லை.

எனினும் பனிப்பொழிவை நாம்கட்டுப்படுத்த முடியாது. பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். கடைசி இரு ஆட்டங்களிலும் நாங்கள் முயற்சி செய்து 200 முதல் 210 ரன்கள் வரை எடுத்தோம். ஆனால் இந்த போட்டிக்கான ஆடுகளத்தில் 180 ரன்களை பெறுவதே கடினமாக இருந்தது.

50 முதல் 60 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். நாங்கள் பேட்டிங் செய்த போது ஆடுகளம் சிறப்பானதாக இல்லை. ஆனால் 2-வது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு இருந்தது. இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x