Published : 26 Jul 2014 09:01 PM
Last Updated : 26 Jul 2014 09:01 PM
9 டெஸ்ட் போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்த பிறகும் அலிஸ்டர் குக் இங்கிலாந்து கேப்டன் பொறுப்பில் நீடிக்கிறார் என்றால் அதற்கு கிரிக்கெட் வாரியத்தின் அரசியலே காரணம் என்று கெவின் பீட்டர்சன் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:
இப்போதைக்கு அலிஸ்டர் குக் கேப்டன்சியில் நீடிப்பது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அரசியல்தான் காரணம், இன்னொரு பிரச்சனை வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. ஆனால் குக் இங்கிலாந்துக்கு எது சரியோ அதைச் செய்ய வேண்டும், அவர் ராஜினாமா செய்யவேண்டும், கேப்டன்சிக்குத் தகுந்த சாதுரியமான மூளை அவருக்கு இல்லை.
அவரது கேப்டன்சி சுமையினால் துவக்க வீரர் குக்கை இங்கிலாந்து இழந்து வருகிறது. அவரது ஃபார்மை அவர் மீண்டும் கண்டுபிடித்துக் கொள்ள நீண்ட காலம் தேவைப்படாது.
குக் அதேபோல் மூத்த வீரர்கள், அனுபவஸ்தர்கள் அறிவுரையைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனை அறையில் ஆர்தர்டன், நாஸர் ஹுசைன், ஷேன் வார்ன் ஆகியோர் சிறந்த யோசனைகளை வழங்குகின்றனர். அதை அப்படியே கேட்டு களத்தில் அமல் படுத்த வேண்டியதுதான்.
இங்கிலாந்து பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ், பால் ஃபேர்பிரேஸ் ஆகியோருக்கு அத்தகைய சாதுரிய யோசனைகள் இல்லை.
இவ்வாறு கூறியுள்ளார் பீட்டர்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT