Published : 11 Feb 2016 08:01 AM
Last Updated : 11 Feb 2016 08:01 AM

ஆன்மிக நூலகம்: உன்னிடம்தான் பொக்கிஷம்

பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குக் காலையில் சென்று தூரத்தில் உள்ள ஒரு மலையைப் பார்த்துக் கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு பெரிய புதையல் உள்ளது என்று ஒருவன் கேள்விப்பட்டான்.



உடனே அவன் காலையில் அந்தப் பாலைவனத்தை அடைந்தான். சூரியன் கிழக்குத் திசையில் இருந்ததால், அவனது நீண்ட நிழல் மேற்குத்திசை தரையில் விழுந்தது. அவன் அந்தப் புதையலைக் கண்டெடுக்கும் எண்ணத்தில் மணலைத் தோண்ட ஆரம்பித்தான். அவன் தோண்டத் தோண்ட காலம் நகர்ந்து கொண்டே யிருந்தது. சூரியனும் கிழக்குத் திசையிலிருந்து மேலே எழும்ப ஆரம்பித்தான்.

சூரியன் மேலெழும்ப, மேலெழும்ப அவனது நிழலும் சுருங்கிக் கொண்டே வந்தது. அவன் தோண்டிக் கொண்டே இருந்தான். நண்பகலில் அவன் நிழல் அவனது காலடிக்குள் நுழைந்து கொண்டது. உண்மையைச் சொன்னால், அங்கு அவனது நிழலே இல்லை. அவன் நிழலைக் காணாமல், எங்கே தோண்டுவது என்று புரியாமல் அழுதுபுலம்பினான். அப்போது அவ்வழியே ஒரு ஞானி வந்துகொண்டிருந்தார். மணலைத் தோண்டிக் கொண்டிருந்தவனின் நோக்கத்தை புரிந்துகொண்ட ஞானி அந்த மனிதனிடம் சொன்னார். “இப்போதுதான் நிழல், புதையல் இருக்கும் சரியான இடத்தைக் காண்பிக்கிறது. அந்தப் புதையல் உனக்குள்தான் இருக்கிறது”

சூஃபி கதைகள்கீர்த்தி நிவேதிதா பதிப்பகம் 22/105, பாஸ்கர் காலனி 3வது தெரு, விருகம்பாக்கம் சென்னை-92 அலைபேசி:7299811445 விலை: ரூ.110/-



திருப்புகழ் முதலான தனது நவமணி நூல்களில் (கந்தர் அந்நாதி, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், வேல்-மயில்-சேவல் விருத்தம், திருப்புகழ், திருஎழுகூற்றிருக்கை, திருவகுப்பு என்பன) அருணகிரிநாதர், ஆதிசங்கரர் அருளிச் செய்த ஷண்மத வழிபாட்டை நமக்கு இனிய சந்தப் பாக்கள் மூலம் விளக்கிக் காட்டுகிறார். அருணகிரி ராமாயணம் என்னும் இந்நூலின் நோக்கம் திருப்புகழ்-ராமாயணம் ஆகிய நூல்களை ஆராய்வது அல்ல; அருணகிரிநாதர் தமது நூல்களில் ராமாயண காவிய சம்பவங்களை எவ்வாறு ரசிக்கிறார், அவரது சந்தப் பாக்களின் சொல்லழகு எத்தகையது, அக்கதாபாத்தி ரங்களின் மூலம் அவர் நமக்கு அளிக்கும் உபதேசங்கள் என்னென்ன என்பனவற்றை மட்டுமே காணலாம்.

முத்தைத்தரு பத்தித் திருநகை எனத் தொடங்கும் பாடலில், பத்துத்தலை தத்தக்கணைதொடு ராமாவதாரம். ஒற்றைக்கிரி மத்தைப் பொருது கூர்மாவதாரம் எடுத்துப் பாற்கடலைக் கடைந்தது. இதேபோன்று அருணகிரியார் ராமாயணக் குறிப்புகளை பெரும்பான்மையான இடங்களில் கையாண்டிருக்கிறார். இவற்றைத் துணையாகக் கொண்டு ராமாயணம் எனும் பெருங்கடலில் முத்துக் குளிக்க வேண்டுவது நம் பொறுப்பு.

அருணகிரி ராமாயணம்சித்ரா மூர்த்தி பக்.80 விலை: ரூ.30 கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x